![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
அதிபர் பைடனின் மகனுக்கு வந்த சிக்கல்.. குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம்.. அமெரிக்காவில் பரபரப்பு!
US President Biden Son: அமெரிக்க அதிபர் பைடனின் மகன் ஹண்டரை குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
![அதிபர் பைடனின் மகனுக்கு வந்த சிக்கல்.. குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம்.. அமெரிக்காவில் பரபரப்பு! America president Biden son Hunter Biden convicted of 3 charges in criminal gun case அதிபர் பைடனின் மகனுக்கு வந்த சிக்கல்.. குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிமன்றம்.. அமெரிக்காவில் பரபரப்பு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/11/ccf6f5249ef47bf9dad293f45b72cc761718120906417729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Biden Son: போதை பொருளுக்கு அடிமையாக இருந்தபோது துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் அமெரிக்க அதிபர் பைடனின் மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சட்டவிரோத போதை பொருளுக்கு அடிமையாக இருந்த சமயத்தில் கை துப்பாக்கியை வைத்திருந்ததாக அமெரிக்க அதிபர் பைடனின் மகன் ஹண்டர் பைடனுக்கு எதிராக மூன்று குற்ற வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கில் டெலாவேர் ஃபெடரல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
துப்பாக்கியை விற்றது தொடர்பான விவகாரத்தில் பொய் வாக்குமூலம் அளித்தது, துப்பாக்கியை வாங்கும் போது நடந்த பணப் பரிமாற்றம் தொடர்பாக பொய் வாக்குமூலம் அளித்தது, போதை பொருளுக்கு அடிமையாக இருந்தபோது கை துப்பாக்கியை வைத்திருந்தது என 3 புகாரில் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு, டெலாவேரில் உள்ள துப்பாக்கி விற்கும் கடையில் கோல்ட் கோப்ரா கைத்துப்பாக்கியை வாங்கியதாக ஹண்டர் பைடன் மீது குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. அந்த காலக்கட்டத்தில், சட்டவிரோத போதை பொருளை அவர் பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் துப்பாக்கியை வாங்க வேண்டுமானால் சரியான தகவல்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தர வேண்டும். இந்த விண்ணப்பத்தில் பைடனின் மகன் தவறான தகவல்களை பூர்த்தி செய்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
அமெரிக்க அதிபராக உள்ள ஒருவரின் மகன்/மகள் குற்ற வழக்கில் சிக்குவது இதுவே முதல்முறை. தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பிறகு அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பைடன் (பைடனின் மனைவி), ஹண்டர் பைடனின் அத்தை வலேரி பிடன் ஓவன்ஸ் ஆகியோர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.
தீர்ப்பு வாசிக்கப்படும் போது ஹண்டர் பைடனின் மனைவி மெலிசா கோஹன் பைடன் நீதிமன்ற அறையில்தான் இருந்தார். மூன்று மணி நேர விசாரணைக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது. இரு தரப்பு வாதமும் நேற்று நிறைவடைந்தது.
தண்டனை குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என நீதிபதி மேரிலென் நோரிகா அறிவித்துள்ளார். இந்த வழக்கில் தனது மகன் குற்றவாளி என தீர்ப்பு வந்தால் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படாது என அதிபர் பைடன் முன்னதாகவே அறிவித்துவிட்டார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)