Iran on Nuclear Talks: இதோ, அவரே சொல்லிட்டாரே.! அணுசக்தி பேச்சுவார்த்தை குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் கூறியது என்ன.?
அமெரிக்கா - ஈரான் இடையே 2-ம் கட்டமாக அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், அது குறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அது என்ன தெரியுமா.?

அமெரிக்கா-ஈரான் இடையே, அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நேற்று ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்றது. ஏற்கனவே, முதல் கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், 2-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், அந்த பேச்சுவார்த்தை குறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது என்ன என்பதை பார்க்கலாம்.
அமெரிக்கா - ஈரான் இடையே நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை
ஈரான் சர்வதேச விதிகளை மீறி, தனது அணுசக்தி திட்டத்தின் கீழ் அதிக அளவில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்திருப்பதாகவும், அதன் மூலம் சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும் என்றும் அமெரிக்கா குற்றம் சாட்டியது.
அதோடு, ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை கட்டுப்படுத்தும் விதமாக, ஒரு அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்கா உடன் மேற்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார். ஆனால், அதற்கு ஈரான் உடன்படாததையடுத்து, இஸ்ரேலுடன் இணைந்து, ஈரானில் உள்ள அணுசக்தி மையங்களை குறி வைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
இதைத் தொடர்ந்து பதற்றமான சூழல் ஏற்பட்ட நிலையில், அதனை தவிர்க்க, பேச்சுவார்த்தை நடத்துமாறு அரபு நாடுகள் கோரிக்கை விடுத்தன. இதை ட்ரம்ப் ஏற்ற நிலையில், முதல் கட்ட பேச்சுவார்த்தை ஓமனில் நடைபெற்றது. ஆனால், அதில் எந்தவிதமான சமரசமும் எட்டப்படவில்லை.
இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நேற்று தொடங்கியது.
3 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை - ஈரான் வெளியுறவு அமைச்சர் கூறியது என்ன.?
இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்னதாக, இந்த முறை எந்த ஒப்பந்தமும் எட்டப்படாவிட்டால், ஈரானுக்கு அது மோசமான நாளாக மாறும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், ஜெனீவாவில் நேற்று 3 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை குறித்து கருத்து தெரிவித்துள்ள ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, ஓமனில் நடந்த முதல் சுற்று பேச்சுவார்த்தைகளுடன் ஒப்பிடும்போது, இந்த முறை நடந்த பேச்சுவார்த்தை மிகவும் ஆக்கப்பூர்வமானதாக இருந்ததாக கூறியுள்ளார்.
மேலும், பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, இந்த பேச்சுவார்த்தையில் மறைமுகமாக பங்கெடுக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார். ஆனால், அது குறித்து அரக்சி எதுவும் தெரிவிக்கவில்லை.
ஒருவேளை, ட்ரம்ப் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்ததாலேயே பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக என்று தெரியவில்லை. மற்றொரு முக்கியமான விஷயம், ஈரான் விடுத்திருந்த நிபந்தனை. அது என்னவென்றால், கடுமையான பொருளாதாரத் தடைகளை நீக்கினால், அணுசக்தி ஒப்பந்தத்தில் சமரசம் செய்யத் தயார் என்று ஈரான் கூறியிருந்தது. தற்போது அது குறித்தும் எந்த தகவலும் வெளியாகவில்லை. அதனால், இந்த பேச்சுவார்த்தை குறித்த கூடுதல் தகவலுக்காக நாம் காத்திருக்கத் தான் வேண்டும்.























