Tamil Inscriptions in Egypt: அடி சக்க.! எகிப்து பிரமிடுகளில் தமிழ்; பிராமி எழுத்துக்களுடன் கல்வெட்டுகள்; இவ்வளவு பழமையானதா.!
தமிழர்களின் பெருமையை உலகம் அறியச் செய்யும் விதமாக, எகிப்தின் பிரமிடுகளில், பிராமி தமிழ் எழுத்துக்களுடன் கூடிய 20 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முழு விவரங்களை பார்ப்போம்.

எகிப்பு நாட்டில் உள்ள உலகப் புகழ் பெற்ற பிரமிடுகளில், 2000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் என்ன சிறப்பு என்றால், 20 கல்வெட்டுகளில் தமிழ் எழுத்துக்கள் இருப்பதுதான். அது குறித்த முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.
பிரமிடுகளில் பிராமி தமிழ் எழுத்துக்களுடன் 2000 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள்
எகிப்தில் உள்ள புகழ்பெற்ற பிரமிடுகளில், மன்னர்களின் கல்லறைகளில், சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது, அவர்கள் 30 கல்வெட்டுகளை கண்டறிந்துள்ளனர். அதில், 20 கல்வெட்டுகளில் தமிழ் பிராமி எழுத்துக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த கல்வெட்டுகள் கிபி 1 முதல் 3-ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தது என்பதும் தெரியவந்துள்ளது. இதன் மூலம், 2000 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழர்கள் கடல் கடந்து தமிழின் பெருமைகளை அறியச் செய்துள்ளது உறுதியாகியுள்ளது.
“சிகை கொற்றன் வர கண்ட“
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளில், ஒரு கல்வெட்டில் ‘சிகை கொற்றன் வர கண்ட‘ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. அதற்கு, சிகை கொற்றன் வந்து பார்த்தார் என்பது தான் அர்த்தம். இது இல்லாமல், சினை கொற்றன் என்ற பெயர், அங்குள்ள 5 பிரமிடுகளில், 8 இடங்களில் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், 2000 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழ் வணிகர் எகிப்து வரை சென்று வணிகம் செய்துள்ளது தெரியவருகிறது. அதோடு, இந்தியா மற்றும் எகிப்து இடையே வலுவான வர்த்தக உறவுகள் இருந்ததும் உறுதியாகியுள்ளது.
மறுபுறம், வெளி நாட்டில், அதுவும் உலகப் புகழ் பெற்ற ஒரு இடத்தில், தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
புதிய ஆய்வுகள் மேற்கொள்வது காலத்தின் கட்டாயம் - கனிமொழி
இந்த நிலையில், எகிப்து நாட்டில் பழமையான கல்வெட்டுகளில் தமிழ் பிராமி எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், தமிழர்களின் கடல் கடந்த பயணங்கள், பன்னாட்டு வணிகத் தொடர்பு மற்றும் உலகின் பிற நாகரிகங்களுடனான உறவு குறித்து மேலும் பல புதிய ஆய்வுகள் மேற்கொள்வது, காலத்தின் கட்டாயம் என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
மேலும், இது நாட்டின் பாதுகாப்பை, பொருளாதார நலனை, தனித்துவத்தை உறுதி செய்ய முடியாமல் திணறும் மத்திய பாஜக அரசுக்கு பாடம் கற்றுக்கொடுக்க, பண்டைய தமிழ் நாகரிகம் குறித்து புதிய ஆய்வுகள் உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
“கடல் கடந்து உலக நாகரிகங்களில் தடம் பதித்த பெருமைமிகு இனம்தான் தமிழினம்“
இதேபோல், எகிப்தின் பிரமிடு கல்லறைகளில், 2,000 ஆண்டுகள் பழமையான தமிழ் பிராமி கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டிருப்பது, உலக வர்த்தக வரைபடத்தில் தமிழரின் தடம் எவ்வளவு ஆழமாக பதிந்திருந்தது என்பதை நினைவூட்டுகிறது என்று, அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், கடல் கடந்து உலக நாகரிகங்களில் தடம் பதித்த பெருமைமிகு இனம்தான் தமிழினம் என்பதை மீண்டும் உலகுக்கு உரக்கச் சொல்வதுபோல் இந்த கண்டுபிடிப்புத் திகழ்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும், ரோமானிய காலத்திலேயே கடல் கடந்து எகிப்து வரை சென்று, இன்று நாம் பேசும் உலகமயமாக்கலை, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே செயல்படுத்திய முன்னேற்ற நாகரிகம் தமிழர் நாகரிகம் என்பதற்கு இவை மற்றுமொரு சாட்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.






















