தேர்தல் 2026: விழுப்புரத்தில் அதிரடி ஆட்டம் ஆரம்பம்! அரசியல் கட்சிகளுக்கு ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் போட்ட ‘செக்’
அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தின் போது பயன்படுத்தும் பொருட்களுக்கான விலை நிர்ணயம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

விழுப்புரம்: 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது
சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
வாக்குச்சாவடி மையங்கள் ஆய்வு
கூட்டத்தில் பேசிய ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மாவட்டத்தில் தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளின் நிலவரம் குறித்து அவர் பகிர்ந்த தகவல்கள்:
தொகுதிகள்: செஞ்சி, மயிலம், திண்டிவனம், வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி மற்றும் திருக்கோவிலூர்.
மையங்கள்: மொத்தம் உள்ள 1,138 வாக்குச்சாவடி அமைவிடங்களில், 2,166 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சீரமைப்பு: பழுதடைந்த நிலையில் உள்ள கட்டடங்களுக்குப் பதிலாக, புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரசு கட்டடங்களில் வாக்குச்சாவடிகளை மாற்றி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தேர்தல் பிரச்சாரக் கட்டுப்பாடுகள்
அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தின் போது பயன்படுத்தும் பொருட்களுக்கான விலை நிர்ணயம் குறித்து இக்கூட்டத்தில் விளக்கப்பட்டது. இது தொடர்பான கூடுதல் கருத்துக்களை தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு நடைபெறும் கூட்டத்தில் விவாதித்து இறுதி செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும், பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கான இடங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது:
5,000 நபர்களுக்கும் மேல் கூடும் வசதி கொண்ட இடங்களை பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஆய்வு செய்துள்ளனர். அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து காவல்துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் தங்களுக்குத் தேவையான கூடுதல் இடங்கள் குறித்தும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.
இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.வி.சாய்பிரனித், மாவட்ட வருவாய் அலுவலர் கி.அரிதாஸ், திருக்கோவிலூர் சார் ஆட்சியர் ஆனந்த் குமார் சிங், திண்டிவனம் சார் ஆட்சியர் அ.ல.ஆகாஷ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஜான்ஸி ராணி, தனி வட்டாட்சியர் (தேர்தல்) கணேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















