"ரேஷன் கடை போல் உரக்கடைகளிலும் கெடுபிடி!" - உரங்களுடன் எதையும் சேர்த்து விற்கக்கூடாது: அதிரடி உத்தரவு!
உர உரிமம் பெற்ற மொத்தம் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு மானிய உரங்களை பிற உரங்களுடன் இணைத்து விற்பனை செய்யக்கூடாது.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் இரயில் நிலையத்திற்கு, சம்பா சாகுபடி பணிகளுக்காக 2,658 மெட்ரிக் டன் யூரியா உரங்கள் வந்து சேர்ந்துள்ளதாக வேளாண்மை இணை இயக்குநர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இரயில் மூலம் வந்த உரங்கள்
17.12.2025 அன்று முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் மூலம் மங்களூர் துறைமுகத்தில் இருந்து IPL நிறுவன 1337 மெ.டன் யூரியா மற்றும் 18.12.2025 அன்று காக்கிநாடா இரயில் நிலையத்திலிருந்து வரப்பெற்ற CIL நிறுவன 1321 மெ.டன் யூரியா உர மூட்டைகளை விழுப்புரம் வேளாண்மை உதவி இயக்குநர் எம்.என்.விஜயகுமார், மற்றும் உர நிறுவன அலுவலர்கள் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது சம்பா நெல் சாகுபடிக்கான நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். மேலும் உளுந்து, நிலக்கடலை, கரும்பு மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது பயிர்களுக்கு தேவையான உரங்களான யூரியா 3515 மெ.டன், டி.ஏ.பி. 1421 மெ.டன், பொட்டாஷ் 1223 மெ.டன், காம்ப்ளெக்ஸ் 7779 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் 1887 மெ.டன் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் சில்லரை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இம்மாவட்டத்திற்கு தேவையான உர விநியோகத் திட்ட இலக்கீட்டின்படி உர நிறுவனங்களிடமிருந்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உரங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது சம்பா நெல் சாகுபடிக்கு தேவையான உரங்கள் பெறப்பட்டு இருப்பு வைக்கப்படுகிறது. அந்த வகையில் IPL நிறுவனத்திலிருந்து 1337 மெ.டன் யூரியா மற்றும் CIL நிறுவனத்தில் இருந்து 1321 மெ.டன் யூரியா உர மூட்டைகள் சரக்கு ரயிலில் வந்தன.
விழுப்புரம் மாவட்ட இருப்பு நிலவரம்
இதில் IPL நிறுவனத்திலிருந்து வரப்பெற்ற 1337 மெ.டன் யூரியா உரத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு 75.6 மெ.டன் மற்றும் தனியார் உரக்கடைகளுக்கு 341 மெ.டன், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு 325 மெ.டன் மற்றும் தனியார் உரக்கடைகளுக்கு 319 மெ.டன், கடலூர் மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு 101 மெ.டன் மற்றும் தனியார் உரக்கடைகளுக்கு 176 மெ.டன்.
உர மூட்டைகள் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் அந்தந்த மாவட்டங்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன. இதில் CIL நிறுவனத்திலிருந்து வரப்பெற்ற 1321 மெ.டன் யூரியா உரத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு 350 மெ.டன் மற்றும் தனியார் உரக்கடைகளுக்கு 265 மெ.டன், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 175 மெ.டன், திருவள்ளூர் மாவட்டத்திற்கு 175 மெ.டன், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 275 மெ.டன், வேலூர் மாவட்டத்திற்கு 125 மெ.டன் உர மூட்டைகள் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் அந்தந்த மாவட்டங்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன.
விற்பனையாளர்களுக்குக் கடும் எச்சரிக்கை
அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு யூரியா உரங்கள் அனுப்பி வைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உர உரிமம் பெற்ற மொத்தம் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு மானிய உரங்களை பிற உரங்களுடன் இணைத்து விற்பனை செய்யக்கூடாது. மானிய உரங்களை பிற மாவட்டங்களுக்கு அனுப்புவதோ, பிற மாவட்டங்களிலிருந்து கொள்முதல் செய்யவோ கூடாது. விவசாயம் அல்லாத பிற பயன்பாட்டிற்கு மானிய உரங்களை வழங்கக்கூடாது. உரிமத்தில் அனுமதி பெறாமல் கலப்பு உரங்களை இருப்பு வைத்து விற்பனை செய்தல் கூடாது.
விற்பனை நிலையத்தில் உர இருப்பு மற்றும் விலை விபர பலகையினை விவசாயிகளின் பார்வையில் படும்படி வைத்து தினசரி பராமரிக்கப்பட வேண்டும். உரங்களை விற்பனை முனையக்கருவி மூலம் மட்டும் விற்பனை செய்திட வேண்டும். விவசாயிகளுக்கு தேவைக்கு அதிகமாக உரங்களை விநியோகம் செய்யக்கூடாது. நடப்பு சம்பா பருவத்திற்கு தேவையான உரங்கள் போதிய அளவு இருப்பு உள்ளதாக வேளாண்மை இணை இயக்குநர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.





















