மேலும் அறிய
இடம் மாறியும், காட்சி மாறாத கடலூர் அரசு அருங்காட்சியகம்..!
வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை.

அரசு அருங்காட்சியகம்
கடலூரில் வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த தென்னார்க்காடு மாவட்டமாக இருந்தபோதில் இருந்து கடந்த 33 ஆண்டுகளுக்கு மேலாக கடலூர் மாவட்டத்தில் அரசு அருங்காட்சியகம் இயங்கி வருகிறது.
தமிழக அரசின் மூலம் 23 மாவட்டங்களில், அருங்காட்சியங்கள் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. பழங்கால இயற்கைப் பொருட்களை பாதுகாக்கும் இடமாகவும், பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் நமது கலாசாரங்கள், கலை, அறிவியல் உள்ளிட்டவைகளை அறிந்து கொள்ளும் வகையிலும், அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டன. இவைகள் பொழுதுபோக்கு இடம் மட்டுமின்றி, அறிவூட்டும் இடமாகவும் இருக்க வேண்டும் என்பதே நோக்கம்.

இங்கு, பழங்காலச் சிற்பங்கள், பழங்கால நாணயங்கள், மரச்சிற்பங்கள், அயல்நாட்டு நாணயங்கள், முதுமக்கள் தாழி, ஓவியங்கள், இசைக்கருவிகள் உள்ளிட்டவை விளக்கங்களுடன் காட்சிக்கு வைக்கப்பட்டு பொதுமக்கள், பள்ளி கல்லுாரி மாணவ மாணவியர் பார்வையிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், கடலுாரில் 1989ம் ஆண்டு, தொடங்கப்பட்டு தனியார் கட்டடத்தில், அரசு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு, வாடகையில் இயங்கி வந்த அரசு அருங்காட்சியகம் கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட தொடங்கியது.
ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் அரசு அருங்காட்சியகம் செயல்படுவது கூடுதல் சிறப்பாக இருந்தாலும், இடமாற்றப்பட்டபோது கொண்டு வந்து வைக்கப்பட்ட சிலைகள் இன்றும் அதே இடத்தில் அப்படியே கிடக்கிறது.
கடலுார் அண்ணா விளையாட்டரங்கம், கடலூர் மாநகரின் மையத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கலைக் கல்லூரி நீதிமன்றம் வெள்ளி கடற்கரை செல்லும் சாலை என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத இந்த சாலையில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம், ஒப்புக்கென சிறிய அளவில் பெயர் பலகை அலுவலக சுவற்றில் வைக்கப்பட்டுள்ளது. இதனால், பார்வையாளர்கள் யாரும் அந்த பக்கமே திரும்பி பார்ப்பதில்லை. வருவாய் இன்றி, ஆறு பணியாளர்கள் இங்கு பணியாற்றி வரும் நிலையில் கடலூர் மாவட்டத்தில் அரசு அருங்காட்சியகம் தொடங்கப்பட்டதின் நோக்கம் நிறைவேற, தமிழக அரசு நிதி ஒதுக்கி, அருங்காட்சியகத்தை மேம்படுத்த நடவவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுலாத் துறையும் கடலூர் மாநகராட்சியும் அரசு அருங்காட்சியகத்திற்கு பார்வையாளர்கள் வர போதிய ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
பொழுதுபோக்கு





















