ஒரே ஒரு மெசேஜ்.. ஓஹோன்னு வாழ்க்கை.. நம்பி ஏமாந்த லாஸ்பேட்டை பெண்! ரூ.21 லட்சம் மோசடி...
ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாகக் கூறி, புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடமிருந்து ரூ.21.68 லட்சத்தை மர்ம நபர்கள் மோசடி!

புதுச்சேரி : ஆன்லைனில் பகுதி நேர வேலை தருவதாகக் கூறி, புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடமிருந்து ரூ.21.68 லட்சத்தை மர்ம நபர்கள் மோசடி செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பகுதி நேர வேலை மோசடி
புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கு, கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், ஆன்லைனில் பகுதி நேர வேலை (Part-time Job) இருப்பதாகவும், யூடியூப் வீடியோக்களை 'லைக்' (Like) செய்து சப்ஸ்கிரைப் செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. இதை நம்பிய அந்தப் பெண், அவர்கள் கொடுத்த லிங்க் மூலம் சில வீடியோக்களை லைக் செய்துள்ளார். ஆரம்பத்தில் சிறு தொகையை கமிஷனாக அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கிற்கு மர்ம நபர்கள் அனுப்பியுள்ளனர். இதனால் அந்த வேலையின் மீது பெண்ணிற்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
முதலீடு என்ற பெயரில் வலை:
அடுத்த கட்டமாக, "நீங்கள் அதிக பணம் முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபம் பெறலாம்" என ஆசை வார்த்தைகளை மர்ம நபர்கள் கூறியுள்ளனர். இதனை உண்மை என நம்பிய அந்தப் பெண், பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.21 லட்சத்து 68 ஆயிரத்து 400 தொகையை அவர்கள் குறிப்பிட்ட வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைத்துள்ளார். பணத்தை அனுப்பிய பிறகு, தனது லாபத் தொகையையோ அல்லது முதலீடு செய்த பணத்தையோ அந்தப் பெண்ணால் திரும்ப எடுக்க முடியவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட நபர்களிடம் கேட்டபோது, அவர்கள் முறையாகப் பதில் அளிக்காமல் தொடர்பைத் துண்டித்துள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண் அதிர்ச்சியடைந்தார்.
சைபர் கிரைம் போலீசில் புகார்:
இது தொடர்பாக அந்தப் பெண் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்தப் பெண்ணின் பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கி கணக்குகள் மற்றும் மோசடி நபர்களின் செல்போன் எண்களை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் எச்சரிக்கை மற்றும் அறிவுரை
புதுச்சேரி இணைய வழி போலீசார், “இணையத்தில் ஏதேனும் பொருளை வாங்கும் முன்பும் அதன் உண்மைத்தன்மையை நன்கு ஆராய்ந்து, விற்பவரின் முழுமையான விபரங்களையும் சரிபார்த்து பார்த்த பிறகே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சமூக ஊடகங்களில் தோன்றும் கவர்ச்சியான விளம்பரங்களை உடனடியாக நம்பி பணம் செலுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மோசடிக்கு ஆளானவர்கள் உடனடியாக புகார் அளித்தால், குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணி எளிதாகும் என்பதால், எந்த குற்றச்சம்பவத்தையும் மறைக்காமல் உடனடியாக தகவல் தருமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
எங்கே, எப்படி புகார் அளிப்பது?
இணைய குற்றச்செயல்களுக்கு உள்ளானால் அல்லது சந்தேகத்துக்கிடமான எந்த தகவலையாவது காணும்போது, பொதுமக்கள் பின்வரும் வழிகளைப் பயன்படுத்தி புகார் அளிக்கலாம்:
- தேசிய அளவிலான இலவச உதவி எண்: 1930
- புதுச்சேரி சைபர் செல் எண்கள்: 0413-2276144 / 9489205246
- மின்னஞ்சல்: cybercell-police@py.gov.in
- இணைய தளம்: www.cybercrime.gov.in
விழிப்புணர்வே பாதுகாப்பு
ஆன்லைன் உலகில் அதிகரித்து வரும் போலி விளம்பரங்கள் மற்றும் மோசடிகளைத் தடுக்க காவல்துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தாலும், பொதுமக்கள் தங்களுக்குள் விழிப்புணர்வை வளர்த்துக்கொள்வது தான் மிகச் சிறந்த பாதுகாப்பு. குறிப்பாக பண்டிகை நாட்களில் வரும் சலுகை விளம்பரங்களைப் பார்த்து உடனடியாக நம்பாமல் சற்று ஆராய்ச்சி செய்தால், பெரும் இழப்புகளை தவிர்க்கலாம்.























