கைதுக்கு அஞ்சிய காதலன்: விழுப்புரத்தில் ரத்தக் களறியான காதல் விவகாரம்!
விழுப்புரத்தில் காதல் பிரச்சனையில் பனிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவனை கத்தியால் கிழித்த இளைஞர் போலீசாருக்கு பயந்து ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகே பள்ளி மாணவனை கத்தியால் தாக்கிய இளைஞர், காவல்துறையினரின் கைது நடவடிக்கைக்கு பயந்து ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், சித்தாத்தூர் திருக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் தனஞ்செழியன் (20). அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், அருகிலுள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். அந்த மாணவன், தான் படிக்கும் பள்ளியில் சக மாணவி ஒருவருடன் நட்பாகப் பேசி வந்துள்ளார். அந்த மாணவியை தனஞ்செழியன் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தனது காதலியிடம் அந்த மாணவன் பேசுவது தனஞ்செழியனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில், அந்த மாணவனை வழிமறித்த தனஞ்செழியன், "ஏன் என் காதலியிடம் பேசுகிறாய்?" எனக்கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவனை தனஞ்செழியன் சரமாரியாகத் தாக்கினார்.
இந்தக் கொடூரத் தாக்குதலில் மாணவனின் நடுவிரல் துண்டானது. மேலும் தலை, முகம் உள்ளிட்ட உடல் உறுப்புகளில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. ரத்த வெள்ளத்தில் சரிந்த மாணவனை மீட்ட உறவினர்கள், உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட மாணவன் மற்றும் அவரது பெற்றோரின் புகாரின் பேரில், விழுப்புரம் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து தனஞ்செழியனைத் தீவிரமாகத் தேடி வந்தனர். போலீசாரின் பிடி இறுகுவதை உணர்ந்த தனஞ்செழியன் தலைமறைவானார்.
இந்நிலையில், இன்று காலை சித்தாத்தூர் திருக்கை பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் இளைஞர் ஒருவர் சடலமாகக் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இறந்து கிடந்தது மாணவனைத் தாக்கிய தனஞ்செழியன் என்பதும், போலீஸ் தேடுவதை அறிந்து பயந்துபோய் அவர் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டதும் உறுதி செய்யப்பட்டது.
காதல் விவகாரத்தில் பள்ளி மாணவன் தாக்கப்பட்டதும், அதனைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய இளைஞரே தற்கொலை செய்து கொண்டதும் சித்தாத்தூர் திருக்கை கிராமத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து தாலுக்கா போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்





















