விஜய்க்கு முன் அரசியலில் வென்ற அமிதாப்.. 2 ஆண்டுகளில் ராஜினாமா செய்ய வைத்த சூழ்ச்சி!
விஜய்க்கு முன்பே அரசியலில் களமிறங்கி தேர்தலில் வென்ற அமிதாப் பச்சன், போஃபர்ஸ் சர்ச்சையால் இரண்டு ஆண்டுகளில் பதவி விலகினார்.

நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழகத்தில் மட்டும் புதிதல்ல. நடிகர் விஜய் அரசியலில் களமிறங்கி, தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகவும் முதலமைச்சராகவும் அரசியல் பயணத்தை தொடர்ந்து வரும் நிலையில், அவருக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் அரசியலில் நுழைந்து தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்திருக்கிறார். ஆனால், அவரது அரசியல் பயணம் வெறும் இரண்டு ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது.
அமிதாப் பச்சனின் அரசியல் பயணம்
1983-ம் ஆண்டு ‘கூலி’ படப்பிடிப்பில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் உயிருக்கு போராடிய அமிதாப் பச்சன், நீண்ட சிகிச்சைக்குப் பிறகு மீண்டார். அவருக்காக நாடு முழுவதும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர். இதன் பின்னர் அவரது நெருங்கிய நண்பரும் அப்போதைய பிரதமருமான ராஜீவ் காந்தி, அரசியலுக்கு வருமாறு அமிதாப் பச்சனை அழைத்தார். அந்த அழைப்பை ஏற்று 1984 மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து முன்னாள் உத்தரப் பிரதேச முதல்வர் ஹெச்.என். பகுகுணா போட்டியிட்டார். ஆனால், அமிதாப் பச்சன் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு திரைப்படங்களில் இருந்து விலகி, தனது தொகுதி மக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்தினார். டெல்லியில் அரசு இல்லத்தில் குடியேறி தொகுதி பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டார்.
அரசியல் சூழ்ச்சிகள்
ஆனால், அரசியலுக்குள் வந்த குறுகிய காலத்திலேயே அமிதாப் பச்சனின் செல்வாக்கு காங்கிரஸ் கட்சிக்குள் சில மூத்த தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. குறிப்பாக அப்போதைய நிதியமைச்சர் வி.பி. சிங் அமிதாப் பச்சனின் அரசியல் வளர்ச்சியை விரும்பாததாகவும் அவரது தொகுதி பணிகளுக்கு வேண்டுமென்றே தடைகள் உருவாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
தனது நண்பரது அழைப்பின் பேரில் அரசியலுக்கு வந்திருந்தாலும் அமிதாப் பச்சன் தன்னை வெற்றிபெற வைத்த மக்களுக்காக கடினமாக உழைக்க தயாராக இருந்தார். மும்பையில் இருந்து தனது தொகுதியிலேயே தங்கவும் ஆரம்பித்தார். அன்றைய தேதியில் தான் கமிட் ஆகியிருந்த படங்களில் மட்டும் அமிதாப் பச்சன் நடித்து வந்தார். ஒரு சில நாட்கள் தனது தொகுதிக்கு அவர் வரவில்லை என்றாலும் அவரை காணவில்லை என அவருக்கு எதிராக கடுமையான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அமிதாப் பச்சன் மீதான் ரசிகர்களின் அன்பு அவ்வளவு எளிதாக குறைந்துவிடவில்லை.
இரண்டே ஆண்டுகளில் ராஜினாமா
இந்த சூழலில் 1987-ல் போஃபர்ஸ் ஆயுத ஒப்பந்த ஊழல் இந்திய அரசியலில் பெரும் புயலை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் அமிதாப் பச்சனின் சகோதரர் அஜிதாப் பச்சனின் பெயரும் தொடர்புபடுத்தப்பட்டது. அமிதாப் பச்சனும் இந்த விவகாரத்தில் தொடர்புடையவர் என குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், பின்னர் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்பது தெரியவந்தது. ஸ்வீடன் பத்திரிகை ஒன்றுக்கு எதிராக பச்சன் குடும்பம் வழக்கும் தொடர்ந்தது. ஆனால் இந்த பிரச்சனையை பெரிதாக்கி அமிதாப் பச்சனுக்கு எதிராக கடுமையான பிரச்சாரங்கள் செய்யப்பட்டது.
போஃபர்ஸ் சர்ச்சை ஏற்படுத்திய அரசியல் அழுத்தம் காரணமாக 1987-ல் அமிதாப் பச்சன் தனது மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விவகாரத்தில் அவர் தவறாக குற்றம்சாட்டப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. 1998-ல் தனது அரசியல் அனுபவத்தை நினைவுகூர்ந்த அமிதாப், அந்த காலகட்டத்தை தனது வாழ்க்கையின் மிகவும் வேதனையான அனுபவமாக குறிப்பிட்டார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















