15 ஆண்டுகள் தனியாரிடம் கொடுக்க தீர்மானமா? திருச்சி மக்கள் அதிர்ச்சி - எதற்காக?
திருச்சி பஞ்சப்பூர் புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை தனியாரிடம் ஒப்படைப்பது, மாநகரில் சாத்திய கூறுகளை கண்டறிந்து, 50 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க தடையில்லா சான்றை வழங்குவது

தஞ்சாவூர்: என்னங்க இது இப்படி ஒரு முடிவு எடுத்து இருக்காங்க... இது சரியாக இருக்குமா என்று திருச்சி பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எதற்காக தெரியுங்களா?
திருச்சி மாநகராட்சியின் அவசரக் கூட்டம் மாநகர மேயர் மு.அன்பழகன் தலைமையில் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், திருச்சி பஞ்சப்பூர் புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை தனியாரிடம் ஒப்படைப்பது, வரும் மே 9 ஆம் தேதிக்குள்ளாக மாநகரில் சாத்திய கூறுகளை கண்டறிந்து, 50 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க தடையில்லா சான்றை வழங்குவது, மே ஒன்பதாம் தேதி தமிழக முதல்வர் திருச்சி பஞ்சப்பூரில் அமைந்துள்ள மாநகரின் புதிய ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை திறந்து வைக்க உள்ளார். இதனையொட்டி முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 40 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு சுமார் 15 ஆண்டு காலத்திற்கு பராமரிப்பு பணியினை மேற்கொள்ளவும், பேருந்து முனையத்தை முறையாக இயக்கவும் நகராட்சி நிர்வாக இயக்குனரின் நிர்வாக அனுமதி பெறுவதற்கு கருத்துரு அனுப்பி வைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம்தான் மக்கள் மத்தியில் பேசும் பொருளாகி உள்ளது. இத்தனை ஆண்டுகள் பராமரிப்பு பணிக்காக கொடுத்தால் அவர்கள் மக்களிடம் தேவையில்லாத கட்டணங்களை வசூலிப்பார்களே என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடைபாதை வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாத்து, நடைபாதை விற்பனையை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ், நகர விற்பனை குழுவில் இடம்பெற உள்ள ஆறு உறுப்பினர்களை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகின்ற மே மாதம் 12ஆம் தேதி தொடங்கி 19ஆம் தேதி நிறைவடைகிறது. 20ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசலனை செய்யப்பட்டு, 21ஆம் தேதி வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும். 22ஆம் தேதி வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு, 30-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பிஷப் ஷீபர் மேல்நிலைப் பள்ளியில் இத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. மாலை 6:00 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடத்துவது என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பஞ்சப்பூர் பேருந்து முனையத்திற்கு கலைஞரின் பெயரையும், லாரி முனையத்திற்கு பேரறிஞர் அண்ணாவின் பெயரையும், அதன் அருகே அமையவுள்ள சந்தைக்கு தந்தை பெரியார் பெயரையும் வைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.
மாநகராட்சி நிர்வாகத்தினரால் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட கால்நடைகள் மூலம், ஏலம் மற்றும் அபராத தொகையாக 23 லட்சத்து 22 ஆயிரம் 500 வருமானம் கிடைத்துள்ளது என்ற விபரம் வெளியிடப்பட்டது. மேலும், தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடுவதை அதிகரிப்பது உள்ளிட்ட 40 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பஞ்சப்பூர் பேருந்து முனையத்தை திறம்பட பராமரிக்க போதிய பணியாளர்கள் மற்றும் உபகரணங்கள் மாநகராட்சியிடம் இல்லை. எனவே, தனியார் மூலம் பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பேருந்து நிலையம் சரியான முறையில் பராமரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேருந்து நிலையம் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இங்கு இரண்டு தளங்கள் உள்ளன. இரண்டு தளங்களையும் இணைக்க 12 லிஃப்ட் வசதிகள் உள்ளன. எனவே, தனியார் மூலம் பராமரித்தால், அனைத்து வசதிகளும் சரியாக செயல்படும். திருச்சி மாநகராட்சி தயாரித்த சாத்தியக்கூறு அறிக்கையின் அடிப்படையில், தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்திற்கு (TNIDB) அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டது" என்றார்.
இந்த தீர்மானத்திற்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சிபிஐ கவுன்சிலர் கே. சுரேஷ் கூறுகையில், "15 வருடங்கள் என்பது மிக நீண்ட காலம். இந்த திட்டத்திற்கு தேவையான வருவாயை மாநகராட்சிக்கு கிடைக்கச் செய்ய வேண்டும். அவ்வப்போது பராமரிப்பு பணியை மதிப்பீடு செய்து, ஒப்பந்தத்தை வழங்கலாம்" என்றார்.
இதுகுறித்து மேயர் கூறுகையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேருவுடன் கலந்து பேசி, தனியார் ஒப்பந்த காலம் இறுதி செய்யப்படும் என்றார்.
கூட்டத்தில், மாநகராட்சி துணை ஆணையர் க.பாலு, துணை மேயர் ஜி.திவ்யா ஆகியோர் முன்னிலையில், நகர் நல அலுவலர், மண்டலத் தலைவர்கள், செயற்பொறியாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

