நீலகிரி, ஈரோடு மக்களுக்கு இனிப்புச் செய்தி... ரூ.3,685 கோடி எரிவாயு திட்டத்தால் வளர்ச்சி காத்திருக்கிறது!
ரூ. 3,685 கோடி முதலீட்டில் இந்த நகர எரிவாயு விநியோகத் திட்டம், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்கள் முழுவதும் விரிவான எரிவாயு விநியோகக் கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தஞ்சாவூர்: திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் நகர எரிவாயு விநியோகத் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ரூ.3,685 கோடி மதிப்பில் இத்திட்டத்தை பாரத் பெட்ரோலியம் நிறுவனம் (பிபிசிஎல்) மேற்கொள்கிறது. இதனால் இப்பகுதிக்கு மேம்பட்ட வளர்ச்சி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் நடந்து என்டிஏ கூட்டணி மாநாட்டில் கலந்து கொள்ள வந்த பிரதமர் மோடி முன்னதாக பல்வேறு நலத்திட்டங்களை தொடக்கி வைத்தார். அந்த வகையில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாட்டின் நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் செயல்படுத்தப்படவுள்ள நகர எரிவாயு விநியோகத் (CGD) திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்தியாவின் தூய்மையான எரிசக்தி உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதிலும், இயற்கை எரிவாயுவை தூய்மையான மற்றும் பாதுகாப்பான எரிபொருளாகப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதிலும் இத்திட்டம் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்.
மொத்தம் ரூ. 3,685 கோடி முதலீட்டில் இந்த நகர எரிவாயு விநியோகத் திட்டம், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்கள் முழுவதும் விரிவான எரிவாயு விநியோகக் கட்டமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், சுமார் 8,84,777 வீடுகளுக்கும், 200-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கும் குழாய் மூலம் இயற்கை எரிவாயு (PNG) இணைப்புகளை வழங்க பாரத் பெட்ரோலியம் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், இப்பகுதி முழுவதும் தூய்மையான வாகன எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக 200-க்கும் மேற்பட்ட அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன. இத்திட்ட பணிகளை மார்ச் 31, 2030-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நகர எரிவாயு விநியோகக் கட்டமைப்பை உருவாக்க, வலுவான மற்றும் நம்பகமான இரும்பு மற்றும் எம்.டி.பி.இ (MDPE) குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. குறைந்தபட்ச பணித் திட்டமாக 1316 அங்குலம்-கிமீ (inch-km) நீளத்திற்கு குழாய் வலையமைப்பை நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான இயற்கை எரிவாயு, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள இந்திய எரிவாயு ஆணையத்தின் (GAIL) வலையமைப்பிலிருந்து பெறப்படும்.
பெருந்துறையில் உள்ள சிட்டி கேட் நிலையத்திலிருந்து ஈரோடு மாநகரை இணைப்பதற்காக குழாய் பதிக்கும் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. வாடிக்கையாளர்களை இத்திட்டத்தில் இணைக்கிற மற்றும் வலையமைப்பை விரிவுபடுத்துகிற ஆரம்பக் கட்ட செயல்பாடாக, பெருந்துறை மற்றும் ஈரோடு நகரங்களில் வீடுகளுக்கான எரிவாயு இணைப்பை வழங்குவதற்கான முன்பதிவு செயல்முறையும் தொடங்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய எரிபொருட்களுக்குப் பதிலாகத் தூய்மையான இயற்கை எரிவாயுவை ஊக்குவிப்பதன் மூலம், இந்தியாவின் 'நெட்-ஜீரோ' (கார்பன் சமநிலை) உமிழ்வு இலக்குகளை அடைவதில் இத்திட்டம் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குழாய் வழியாக எரிவாயு (PNG) மற்றும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) பயன்பாட்டுக்கு மாறுவதன் மூலம் பசுமைக்குடில் வாயு உமிழ்வு சுமார் 24 சதவீதம் குறையும். இது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், மற்றும் இப்பகுதிகளில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கும் பெரிதும் உதவும்.
பி.என்.ஜி (PNG) பயன்பாடு பல்வேறு துறைகளில் சமையல் எரிவாயு (LPG) பயன்பாட்டைக் கணிசமாகக் குறைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது வீடுகளில் 40 முதல் 50 சதவீதம், வணிகத் துறையில் 50 முதல் 60 சதவீதம் அளவுக்கு திரவ எரிவாயு (எல்பிஜி) பயன்பாட்டைக் குறைக்கும். இயற்கை எரிவாயுவுக்கு மாறும் தொழிற்சாலைகள், குழாய் மூலம் தடையின்றி எரிவாயுவைப் பெறுவதால் அவற்றின் எல்.பி.ஜி பயன்பாடு 60 முதல் 80 சதவீதம் வரை குறையும்.
இந்த நகர எரிவாயு விநியோகத் திட்டம் இப்பிராந்தியத்திற்கு பல சமூக மற்றும் பொருளாதார ஆதாயங்களை வழங்கும். பி.என்.ஜி (PNG) மூலம் தொடர்ச்சியான, பாதுகாப்பான மற்றும் வசதியான எரிபொருள் விநியோகம் கிடைப்பதால், சிலிண்டர்களைக் கையாளும் சிரமம் இருக்காது என்பதுடன் செலவும் குறைவாக இருக்கும். அத்துடன், சி.என்.ஜி மற்றும் பி.என்.ஜி ஆகியவை மாசு வெளியீட்டைக் குறைத்துச் சுற்றுச்சூழலின் தரத்தை மேம்படுத்த உதவும்.
இத்திட்டத்தின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட பணி-நாட்கள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் உந்துதலாக அமையும். இயற்கை எரிவாயு உள்கட்டமைப்பு வசதியால் புதிய தொழில் முதலீடுகள் இப்பகுதியில் அதிகமாகும்; உள்ளூர் நிறுவனங்களின் வளர்ச்சி ஊக்கம் பெறுவதோடு இப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளின் ஒட்டுமொத்தப் போட்டித்திறனும் மேம்படும்.
இத்திட்டம் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வந்தவுடன், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள 29.8 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்குத் தூய்மையான மற்றும் நம்பகமான எரிசக்தி கிடைப்பதால், இப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும். நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் இந்த நகர எரிவாயு விநியோகத் திட்டமானது, இந்தியாவின் தூய்மையான எரிசக்தி கட்டமைப்பை விரிவுபடுத்துவதிலும், குறைந்த கார்பன் மற்றும் நிலைப்புத்தன்மையுள்ள எரிசக்தியைப் பயன்படுத்தும் எதிர்காலத்தை நோக்கி நம் நாடு மேற்கொண்டுள்ள பயணத்தில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் எடுத்துள்ள மற்றொரு முக்கிய முன்னேற்ற நடவடிக்கையாக இருக்கிறது.























