பாரதி பிறந்த மண்ணில் சாதி தீ.. களமிறங்கிய கனிமொழி எம்.பி: மாணவர்களுடன் காலை உணவும், கலந்துரையாடலும்
எட்டையபுரத்தில் காலை உணவு திட்டத்தில் பட்டியல் இனத்தனர் சமைத்த உணவை புறக்கணித்த பள்ளியில், மாணவர்கள் மற்றும் பெற்றோருடன் கனிமொழி எம்.பி நேரில் பேசினார்
எட்டையபுரத்தில் காலை உணவு திட்டத்தில் பட்டியல் இனத்தனர் சமைத்த உணவை புறக்கணித்த பள்ளியில், மாணவர்கள் மற்றும் பெற்றோருடன் கனிமொழி நேரில் பேசி, பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவந்து, பள்ளிக் குழந்தைகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே சின்னமலைக்குன்று ஊராட்சிக்கு உட்பட்டது உசிலம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு மொத்தம் 11 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் சமையலராக உசிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த முனிய செல்வி (29) என்பவர் பணியமர்த்தப்பட்டார்.
இவர் கடந்த 25 ஆம் தேதி முதல் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் சமையல் செய்து மாணவ மாணவிகளுக்கு வழங்கி உள்ளார். ஆனால் மாணவ மாணவிகள் பெற்றோர்களின் வற்புறுத்தலால் காலை உணவை சாப்பிடாமல் தவிர்த்து உள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த சமையலர் முனிய செல்வி தனது மேலதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜோன் கிறிஷ்டி பாய், எட்டயபுரம் வட்டாட்சியர் மல்லிகா, எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது, உதவி தொடக்க கல்வி அலுவலர் முத்தம்மாள் மற்றும் அதிகாரிகள் குழுவினர் பள்ளிக்கு சென்று பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து பள்ளிக்கு வருகை தந்த 11 மாணவர்களுக்கும் உணவுகள் பரிமாறி சாப்பிட அறிவுறுத்தினர். ஆனால் குழந்தைகள் சாப்பிடாமல் அழுதுகொண்டே வெகு நேரம் அமர்ந்திருந்தனர். அப்போது பெற்றோர்கள் தரப்பில் சமையலர் முனிய செல்வியை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்த தகவல்கள் பரவியதையடுத்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் உசிலம்பட்டி கிராமத்துக்கு நேரில் சென்று அங்கு பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில், “உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் இரண்டு மாணவர்கள் மட்டுமே சாப்பிடுவதாகவும், மற்ற மாணவர்கள் தவிர்ப்பதாகவும் தகவல் வந்தது. ஆகவே நேரில் ஆய்வு செய்ய வந்தேன். பள்ளி மாணவ மாணவிகளுடன் பேசினேன். அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. தனிப்பட்ட விரோதத்தில் சமையலர் பெண்ணுடன் சண்டை போட்டவர்கள் குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த பிரச்சனைக்கு நாளையே முற்றுப்புள்ளி வைக்கப்படும். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இந்நிலையில் இந்த பிரச்சனை குறித்து கேட்டறிந்த துாத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு நேரில் சென்றார். அங்கிருந்த பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடம் பேசி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தார். மேலும் அங்கே மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவை அருந்தினார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும்,சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.