Adichanallur Excavation: ஆதிச்சநல்லூர் அகழாய்வில் இரண்டு மண்டை ஓடுகள் கொண்ட முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு
ஒரே முதுமக்கள் தாழியில் இரண்டு மூடிகள் இருந்தது. அதை திறந்து பார்த்த போது அதில் இரண்டு மண்டை ஓடுகள் கிடைத்தது. அதனுடன் கை, கால் எலும்புகள், முதுகெலும்பும் இருந்தது.
![Adichanallur Excavation: ஆதிச்சநல்லூர் அகழாய்வில் இரண்டு மண்டை ஓடுகள் கொண்ட முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு Adichanallur Excavations An Elderly Talisman with Two Skulls in a Single Elderly Talisman TNN Adichanallur Excavation: ஆதிச்சநல்லூர் அகழாய்வில் இரண்டு மண்டை ஓடுகள் கொண்ட முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/25/170b03c90141585383c1afd4d533b81c1690252121152739_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் ஒரே முதுமக்கள் தாழியில் இரண்டு மண்டை ஓடுகள் கொண்ட முதுமக்கள் தாழி ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கடந்த 2020ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இதையடுத்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு அகழாய்வு பணிகள் தொடங்கியது.
இந்த அகழாய்வு பணியில் 100க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், தங்க நெற்றி பட்டயம், சங்ககால வாழ்விடம் பகுதிகள், வெண்கலத்தால் ஆன நாய் உருவம், மான், ஆடு, நீர்கோழி, மீன் பிடிக்க பயன்படும் மீன் தூண்டில் முள், மரத்தால் ஆன கைப்பிடி கொண்ட கத்தி, இரும்பு வாள் என ஏராளமான பொருட்கள் கிடைத்தது. இதற்கான பணியை ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகள் பொறுப்பாளர் முனைவர் அருண்ராஜ் தலைமையில் தொல்லியல் ஆய்வாளர் யதீஸ்குமார் மற்றும் தொல்லியல் ஆய்வாளர், ஆய்வு மாணவர்கள் செய்து வருகின்றனர். இதற்காக ஆதிச்சநல்லூரை சுற்றி விளக்கு அமைத்தல், பி சைட் என்னும் இடத்தில் உலகத்தரம் வாய்ந்த சைட் மியூசியத்தில் கண்ணாடி அமைப்பதற்காக பிரேம் அமைத்தல், நிரந்தர செட் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெறுகிறது.
தற்போது அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்பட்ட முதுமுக்கள் தாழிகளை ஆவணப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் அகழாய்வு பணியில் ஒரு கல்வட்டத்தின் நடுவே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு முதுமக்கள் தாழி திறக்கப்பட்டது. அதில் ஆய்வாளர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக ஒரே முதுமக்கள் தாழியில் இரண்டு மூடிகள் இருந்தது. அதை திறந்து பார்த்த போது அதில் இரண்டு மண்டை ஓடுகள் கிடைத்தது. மேலும் அதனுடன் கை, கால் எலும்புகள், முதுகெலும்பும் இருந்தது. இதனோடு சிறு சிறு பானைகளும், இரும்பால் ஆன உளியும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு மண்டை ஓடுகளும் கணவன் மனைவியா? அல்லது தாய் குழந்தையா? என்று தெரியவில்லை. இதற்குரிய ஆய்வாளர்கள் மூலம் ஆய்வு செய்து இதற்கான தகவல் விரைவில் கிடைக்கும் என்று ஆய்வாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)