மேலும் அறிய
திருவாரூர்: நண்பர்கள் தினத்தன்று மூன்று நண்பர்கள் தற்கொலை முயற்சி - ஒருவர் உயிரிழப்பு
நண்பர்கள் தினத்தன்று மூன்று நண்பர்கள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி. ஒருவர் உயிரிழப்பு

தற்கொலை செய்துகொண்டவர்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை அடுத்துள்ள கப்பளுடையான் கிராமத்தில் தந்தை திட்டியதால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை. அவரோடு தற்கொலைக்கு முயன்ற நண்பர்கள் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கப்பலுடையான் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 26). இவரது தந்தை பெயர் கார்த்திகேயன். தந்தை கார்த்திகேயன் விவசாயம் செய்து வருகிறார். ஆனந்த் அவருடைய நண்பர்கள் அசோக்குமார் (வயது 26), ஆசைத்தம்பி (வயது 28) ஆகிய மூன்று பேரும் இணைபிரியாத நண்பர்கள். மூன்று பேருக்கும் இதுவரை திருமணம் ஆகவில்லை.
இவர்கள் குறிப்பிட்ட எந்த வேலையும் செய்யாமல் சிறு சிறு கூலி வேலைகளை மட்டும் செய்து கொண்டு ஊர் சுற்றி வந்துள்ளனர். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மது போதையில் ஆனந்த் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் மீது இருசக்கர வாகனத்தை விட்டு மோதி உள்ளார். இந்த சம்பவம் குறித்து அவர் பெற்றோரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் சமாதானமாக பேசி காயம்பட்டவரை அவரது பெற்றோர் பேசி அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மூன்று பேரும் இரவில் தினந்தோறும் மது அருந்தியும் வந்துள்ளனர். இதனை பெற்றோர்கள் பலமுறை கண்டித்தும் மூன்று பேரும் திருந்தவில்லை. இந்நிலையில் ஆனந்தை அழைத்த அவரது தந்தை கார்த்திகேயன் கண்டித்துள்ளார். இதில் மனவேதனை அடைந்த ஆனந்த் தனது நண்பர்களான ஆசைத்தம்பி மற்றும் அசோக்குமார் ஆகியோரோடு மது அருந்தும்போது தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்ட இவரது நண்பர்கள் அசோக்குமார் மற்றும் ஆசைத்தம்பி ஆகிய இருவரும் நீ மட்டும் தற்கொலை செய்துகொள்ள வேண்டாம். மூவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்வோம் என்று சொல்லி மூன்று பேரும் மது வாங்கி வந்து அதில் பூச்சி மருந்தை கலந்து குடித்துள்ளனர்.

இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிக் கிடந்த மூவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்த் (வயது 26) பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அசோக்குமார் மற்றும் ஆசைத்தம்பி ஆகிய இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக நீடாமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தந்தை திட்டியதன் காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்திலும் நீடமங்கலம் காவல்துறையினர் தங்களது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

நண்பர்கள் தினத்தன்று நண்பர்கள் மூவரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு அதில் ஒருவர் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
மேலும் படிக்கவும்























