தூத்துக்குடி-திருச்செந்தூர் நெரிசலுக்கு குட்பை.. முருக பக்தர்களுக்கு குட் நியூஸ்.. அமைகிறது 107 கி.மீ. புதிய நான்கு வழிச்சாலை!
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தொடங்கி தெற்கே துறைமுக நகரமான தூத்துக்குடி வரையில் 690 கி.மீ. தொலைவிற்கு NH 32, 4 வழிச்சாலை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி முதல் கன்னியாகுமரி வரையிலான புதிய நான்குவழிச்சாலைக்கான திட்ட வரைப்படத்தை நெடுஞ்சாலை ஆணையமானது வெளியிட்டுள்ளது. இந்த திட்டம் பயன்ப்பாட்டுக்கு வந்தால் தூத்துக்குடியில் திருச்செந்தூர் செல்லும் முருக பக்தர்களின் பயண குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நான்கு வழிச்சாலை திட்டங்கள்:
நாடு முழுக்க உள்ள முக்கிய நகரங்களை இணைக்கின்ற வகையில் தேசிய நெடுஞ்சாலைகளை 4 வழி, 8 வழி மற்றும் 16 வழி சாலைகளாக மாற்றும் பணிகளை தேசிய நெடுஞ்சாலை வாரியமான மேற்க்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தொடங்கி தெற்கே துறைமுக நகரமான தூத்துக்குடி வரையில் 690 கி.மீ. தொலைவிற்கு என்.எச் 32 4 வழிச்சாலை திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இத்திட்டம் நீட்டிக்கப்பட்டு தூத்துக்குடியில் தொடங்கி ஆறுப்படை வீடான திருச்செந்தூரை கடந்து கன்னியாகுமரி வரை இந்த புதிய 4 வழிச்சாலை திட்டம் அமைக்கப்பட உள்ளது.
திட்டப்பணிகள்
சுமார் 106.9 கி.மீ. தொலைவில் புதிதாக 4 வழிச்சாலை திட்டம் அமைகிறது. இதற்காக 853.09 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் புதுக்கோட்டை அருகில் முடிவைத்தானேந்தல் கிராமத்தில் தொடங்கி:
தூத்துக்குடி மாவட்டம் (25 கிராமங்கள்): கடம்பூர், நட்டாத்தி, சிறுத்தொண்டநல்லூர், ஆறுமுகமங்கலம், கொட்டாரக்குறிச்சி, வாழவல்லான், சுகந்தலை, சேதுக்குவாய்த்தான், அங்கமங்கலம், நல்லூர், ஆறுமுகநேரி, அம்மன்புரம், மூலக்கரை, நத்தகுளம், கந்தசாமிபுரம், மேல திருச்செந்தூர், கீழ திருச்செந்தூர், குலசை, உடன்குடி, ஆதியாக்குறிச்சி, பள்ளக்குறிச்சி, படுக்கப்பத்து, திருப்பணி புத்தன்தருவை.
நெல்லை மாவட்டம் (11 கிராமங்கள்): கூட்டம், உவரி, கரைச்சுத்துபுதூர், கூடங்குளம், இருக்கந்துறை 1, 2, லெவிஞ்சிபுரம் வழியாக அஞ்சுகிராமத்திற்கு சற்று முன்னதாக கருங்குளத்தில் நெல்லை-கன்னியாகுமரி 4 வழிச்சாலை திட்டத்தில் இணைக்கப்பட உள்ளது.
ரயில்வே பாலம்
தூத்துக்குடி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஆறுமுகநேரி, காயல்பட்டினம், வீரபாண்டியபட்டினம் (சண்முகபுரம்) ஆகிய 3 மூன்று இடங்களில் ரயில்வே கேட்டுகள் உள்ளன. அதேபோல் திருநெல்வேலி சாலையில் குரும்பூர் அருகே நல்லூர் ரயில்வே கேட் உள்ளது. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மார்க்கமாக வரும் பக்தர்கள், இந்த கேட்டுகளை கடந்து தான் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது. இதில் நல்லூர் கேட்டில் மட்டும் தற்போது மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் புதிக 4 வழிச்சாலை திட்டத்தில் நல்லூர் அருகே உள்ள நாக கன்னியாபுரம் ரயில்வே கேட்டிற்கு பாலம் அமைக்கப்பட்டு 4 வழிச்சாலை செயல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
முருக பக்தர்கள் வரவேற்பு
முருகனின் அறுபடை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் வருடம் முழுவதும் நடைபெறும் திருவிழாக்களுக்கும் வார விடுமுறை மற்றும் அரசு விடுமுறைகளுக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நூற்றுக்கணக்கான வாகனங்களில் வந்து செல்கின்றனர். பக்தர்கள் தூத்துக்குடி - திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறு சிறு ஊர்களை கடந்து திருச்செந்தூர் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஸ்பிக் நகர் மற்றும் பழையகாயல் தொடங்கி திருச்செந்தூர் வரை சாலை குறுகலாக இருப்பதால், பயண நேரம் மற்றும் தூரம் கூடுதல் ஆகிறது என தெரிவிக்கின்றனர். தற்போது தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் அருகில் 4 வழிச்சாலை திட்டம் கன்னியாகுமரி வரை சென்றடைவதால் திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் பயண நேரம் மற்றும் தூரம் வெகுவாக குறையும் என்பதால் இந்த திட்டத்திற்கு பக்தர்கள் தரப்பில் வரவேற்பு எழுந்துள்ளது.
இந்த திட்டத்திற்காக பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க 21 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை முடிகிறது. இதைத் தொடர்ந்து, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் இழப்பீடு வழங்கும் பணிகள் தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது
























