ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! பெங்களூரு-கொல்லம், தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள்: முன்பதிவு எப்போது?
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தடுக்கவும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கிய போக்குவரத்து சேவையாக இருந்து வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 13,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். ரயில் பயணங்களில் ஏற்படும் சிக்கல்களை தடுக்கவும், பெரும்பாலும் போக்குவரத்து சிரமங்களை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு பணிகளை செய்து வருகிறது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,பெங்களூருவில் இருந்து வருகிற 16-ந்தேதி மாலை 3 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்.06561), சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் காலை 6.20 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து வருகிற 17-ந்தேதி காலை 10.45 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு செல்லும் சிறப்பு ரயில் (06562), மேற்கண்ட வழித்தடம் வழியாக மறுநாள் அதிகாலை 3.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.
பெங்களூருவில் இருந்து வருகிற 21-ந்தேதி இரவு 11 மணிக்கு புறப்பட்டு கொல்லம் செல்லும் சிறப்பு ரயில் (06567), சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மறுநாள் மதியம் 12.55 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து வருகிற 22-ந்தேதி மாலை 5 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு செல்லும் சிறப்பு ரயில் (06568), மேற்கண்ட வழித்தடம் வழியாக மறுநாள் காலை 9.45 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.

பெங்களூருவில் இருந்து வருகிற 17, 21 ஆகிய தேதிகளில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு தூத்துக்குடி வரும் சிறப்பு ரயில் (06297), சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூர் வழியாக மறுநாள் காலை 11 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். மறுமார்க்கமாக தூத்துக்குடியில் இருந்து வருகிற 18, 22 ஆகிய தேதிகளில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு செல்லும் சிறப்பு ரயில் (06298), மேற்கண்ட வழித்தடம் வழியாக மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.




















