தூத்துக்குடியில் கண்கவர் காட்சி! ரோஸி ஸ்டார்லிங் பறவைகள் வலசை: விவசாயிகளுக்குப் பெரும் நன்மை!
தாமிரபரணி ஆற்றங்கரைப் பகுதிகளுக்கு வலசை வந்த ஆயிரக்கணக்கான ரோஸி ஸ்டார்லிங் பறவைகள் கண்கவர் வான்வழி காட்சிகளை உருவாக்கின.
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், குறிப்பாக பெருங்குளம் மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரைப் பகுதிகளுக்கு வலசை வந்த ஆயிரக்கணக்கான ரோஸி ஸ்டார்லிங் பறவைகள் கண்கவர் வான்வழி காட்சிகளை உருவாக்கின.
இதுகுறித்து மாவட்ட வனத்துறையினர் கூறுகையில், தூத்துக்குடி ஒரு கடலோர மாவட்டம் என்பதால், ஒவ்வொரு குளிர்காலத்திலும் பல வகையான பறவைகள் வலசை வருவதை இங்கு காண முடிகிறது. சமீபத்தில், பெருங்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரோஸி ஸ்டார்லிங் பறவைகளின் பெரும் வருகையை காண முடிந்தது. ரோஸி ஸ்டார்லிங் பறவையானது ஸ்டார்லிங் குடும்பத்தைச் சேர்ந்தது. இவை மத்திய ஆசியா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் உள்ள புல்வெளிகளில் இனப்பெருக்கம் செய்கின்றன. பனி மற்றும் குளிர் பிரதேசங்களில் வசிக்கும் பறவைகள் ஆண்டுதோறும் ஜூலை-ஆகஸ்ட் முதல் ஏப்ரல்-மே வரை அவை இந்தியாவைப் போன்ற வெப்பமண்டலப் பகுதிகளுக்கு வலசை வலசை போகின்றன.
பனிக் காலங்களில் கடும் குளிா் வாட்டும்போது உணவு கிடைக்காத சூழ்நிலை ஏற்படுவதால், பல ஆயிரம் கி.மீ. தொலைவை கடந்து மிதமான தட்பவெப்ப நிலை நிலவுகின்ற இந்தியப் பகுதிகளுக்கு அந்தப் பறவைகள் படையெடுக்கின்றன. குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் பெருங்குளம் மற்றும் தாமிரபரணி ஆற்றங்கரைப் பகுதிகளுக்கு குளிர்காலத்தில் வந்து இங்கு தங்கி, பனி காலம் முடிந்து வசந்த காலம் தொடங்கியதும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்குப் பிறகு இந்த பறவைகள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்பி விடும்.
குஜராத்தில் இருந்து தெற்கு நோக்கி வரும் வரை இந்த ரோஸி ஸ்டார்லிங் பறவைகளின் வலசையைக் காண முடியும் என்றும் அவர் கூறினார். தூத்துக்குடியில் ஈரநிலங்கள் உள்ளன. வலசை வரும் பறவைகளுக்குத் தேவையான உணவு, உறைவிடம், பாதுகாப்பு போன்றவை கிடைப்பதும், தட்பவெப்பநிலையும் அவற்றின் வலசைக்கு முக்கிய காரணங்கள். இந்த ஈரநிலமும் விவசாய நிலங்களும் இணைந்து, இந்த வலசைப் பறவைகளுக்கு ஒரு சிறந்த வாழ்விடத்தை வழங்குகின்றன. அதற்காக நாம் பெருமைப்பட வேண்டும். இந்த ஆண்டு அவற்றின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளதைக் காண முடிகிறது என்று கூறினர்.
மேலும் , வெளிநாடுகளிலிருந்து நமது பகுதிக்கு அழையா விருந்தாளிகளாக வரும் பறவைகளின் வாழிவிடங்களை மாசுபடாமல் பாதுகாப்பது, வேட்டையாடுவதை தடுப்பது, பறவைகளை அச்சுறுத்தாமல் இருப்பது போன்றவற்றை கண்காணிப்பது நமது கடமை என்றும் கூறினர். இந்தப் பறவைகள் அதிக எண்ணிக்கையில் வருவதால், அவை வெட்டுக்கிளிகள் மற்றும் பிற பூச்சி வகைகளை முக்கியமாக உண்ணுகின்றன. ஸ்டார்லிங் பறவைகள் வெட்டுக்கிளிகளை உண்பதால், அவை விவசாயிகளின் விளைநிலங்களைக் காப்பாற்றுகின்றன. அவை விவசாயிகளுக்குப் பெரும் பங்களிப்பை வழங்குகின்றன என்று அவர் மேலும் கூறினார்.
தூத்துக்குடி துறைமுகம் அருகே உள்ள கடலோரப் பகுதி, பறவைகளின் செயல்பாடுகளின் பரபரப்பான மையமாக மாறியுள்ளது. தூத்துக்குடி துறைமுக கடற்கரையின் முகத்துவாரப் பகுதியில் பெரிய அளவிலான நீர்ப்பறவைக் கூட்டங்கள் கூடுகின்றன. சமீபத்திய கனமழை காரணமாக, தூத்துக்குடியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள உப்பள பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. பொதுவாக உப்பு உற்பத்திக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் இந்த உப்பள பகுதிகளில், இப்போது இயற்கையான நீர்நிலைகளைப் போலவே காட்சியளிக்கின்றன.
இதன் விளைவாக, இந்த பகுதி பல வகையான நீர்ப்பறவைகளுக்கு உகந்த வாழ்விடமாக மாறியுள்ளது. சிறிய மீன்கள், பூச்சிகள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது, இது பறவைகளுக்கு ஏராளமான உணவை வழங்குகிறது. உப்பள பகுதிகளில் நீர்ப்பறவைகள் இத்தகைய பெரிய அளவில் உணவு தேடும் செயல்பாடு பொதுவாக அரிதானது. இருப்பினும், இந்த ஆண்டு பெய்த கனமழையால் ஏற்பட்ட சூழ்நிலைகள், அந்தப் பகுதியை அவற்றுக்கு ஏற்ற ஒரு சூழலாக மாற்றியுள்ளன.
தற்போது, பறவைக் கூட்டங்கள் உப்பள பகுதிகளில் தரையிறங்கி, ஆர்வமாகவும் சுறுசுறுப்பாகவும் உணவுகளை தேடுவதைக் காண முடிகிறது. இந்த காட்சி இயற்கை ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர்கள் பெருமளவில் பறவைகளைக் கண்டு ரசித்து வருகின்றனர். சமீபத்திய நாட்களில், தூத்துக்குடி மாவட்டத்தில் பெரிய கூட்டமாக ரோஸி ஸ்டார்லிங் பறவைகள் வந்துள்ளன. அவை வானத்தில் கண்கவர் வடிவங்களில் பறப்பதைக் காண முடிகிறது.
Before You Go
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















