கைவினை கலைஞர்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்போம்... மத்திய அமைச்சர் உறுதி
வீணை, தலையாட்டி பொம்மை, கலைத்தட்டு போன்றவற்றை உற்பத்தி செய்யும் கைவினைக்கலைஞர்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கேட்டறிந்தார்.

தஞ்சாவூர்: வரும் தேர்தலில் தி.மு.க., ஆட்சி நிச்சயமாக மக்களால் அகற்றப்படும். தேசிய ஜனநாய கூட்டணி அரசு அமைக்கப்படும். அப்போது, கைவினை கலைஞர்களின் அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்போம் என்று மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜூன் ராம்மேக்வால் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் வீணை, தலையாட்டி பொம்மை, கலைத்தட்டு போன்றவற்றை உற்பத்தி செய்யும் கைவினைக்கலைஞர்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கேட்டறிந்தார். அப்போது கைவினை கலைஞர்களுக்கு ஐடி கார்டு வசதியைக் கொண்டு வர வேண்டும். கைவினைப் கலைஞர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கான மையத்தை தஞ்சாவூரில் அமைக்கப்பட வேண்டும். ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும்.

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை தயாரிக்க பெரிய இட வசதி கொண்ட மையம் அமைக்க வேண்டும். வெள்ளியின் விலை தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதால் தஞ்சாவூர் கலைத்தட்டு தயாரிக்கும் கலைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஐடி கார்டு வைத்திருக்கும் கலைஞர்களுக்கு ஒரு மாதத்திற்கு ஒரு குறிப்பிட்ட விலையில் வெள்ளி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தஞ்சாவூர் கலைத்தட்டு செய்ய அதிக காலம் பிடிக்கிறது. ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குறுகிய காலத்தில் அதனை உருவாக்குவதற்கான பயிற்சி மையம் அமைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர்.
பின்னர் இந்த அனைத்துக் கோரிக்கைகளையும் மத்திய கைவினைத்துறை அமைச்சரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் உறுதி அளித்துள்ளார். மேலும், 10-க்கும் மேற்பட்ட புவிசார் குறியீடு பொருட்கள் உள்ள தஞ்சாவூருக்கு வருகை புரிந்ததில் பெருமைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் தேர்தல் அறிக்கையை உருவாக்கும் பணிக்காக, பல்வேறு இடங்களுக்கு சென்று வருகிறோம். இன்று கைவினை கலைஞர்களை சந்தித்து, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னை குறித்து கேட்டறிந்து தேர்தல் அறிக்கையில் சேர்க்க உள்ளோம். தேர்தலுக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும் போது, கைவினைகலைஞர்களின் பிரச்னையை தீர்ப்போம்.
தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஊக்கப்படுத்தவும், தமிழக மக்களுக்கு நல்லாட்சி கொடுக்கவும் திட்டமிடுகிறது. ஆனால், திமுக அரசு வாரிசு அரசியலை ஊக்குவிக்கிறது. தமிழ்நாட்டு மக்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. இதனால், தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. தரவுகளைப் பார்க்கும்போது பாலியல் வன்கொடுமை, கொலை, போதைப்பொருள் பயன்பாடு போன்ற பிரச்னைகள் அதிகரித்திருப்பது தெரிய வருகிறது.
இதன் காரணமாக மக்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர். எனவே, வருகிற தேர்தலில் இந்த ஆட்சியை மக்கள் அகற்றுவர். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்து, இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணும். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு, கைவினை கலைஞர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விதமாக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் இடம்பெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பாஜக மாநிலப் பொதுச் செயலர் கருப்பு எம். முருகானந்தம், தெற்கு மாவட்டத் தலைவர் பி. ஜெய்சதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பு நிகழ்ச்சியின் போது வீணை உற்பத்தியாளர்களை மத்திய அமைச்சர் வீணையை இசைக்க கூறி ரசித்தார். பின்னர் மத்திய அமைச்சரும் வீணையை இசைத்து பார்த்தார்.






















