இன்னைக்கு எச்சரிக்கை... நாளைக்கு: தஞ்சையில் போக்குவரத்து போலீசார் அதிரடி
முக்கியமாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் திடீரென்று எழுப்பப்படும் ஏர் ஹாரன்களால் அச்சத்திற்கு உள்ளாகி தடுமாறி கீழே விழும் நிலை ஏற்பட்டு வந்தது.

தஞ்சாவூர்: தஞ்சையில் பஸ்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டிருந்தை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்து பேருந்தின் டயர்களில் வைத்து போக்குவரத்து போலீசார் நொறுக்கினர்.
தஞ்சை நகரில் சில பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டு இயக்கப்படுவதாக போக்குவரத்து போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இந்த ஏர் ஹாரன்களால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். மேலும் மாணவர்கள், முதியவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். முக்கியமாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் திடீரென்று எழுப்பப்படும் ஏர் ஹாரன்களால் அச்சத்திற்கு உள்ளாகி தடுமாறி கீழே விழும் நிலை ஏற்பட்டு வந்தது.
அதிக ஒலி எழுப்பும் (Air Horn) ஹாரன்களை மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகள், மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள் மற்றும் அமைதியான குடியிருப்பு பகுதிகளில் ஒலிக்கச் செய்வது சட்டப்படி குற்றமாகும். இவை 130 டெசிபல் வரை சத்தம் எழுப்பக்கூடியவை என்பதால், காது கேளாமை மற்றும் விபத்துகளைத் தவிர்க்க மக்கள் கூடும் இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பயன்படுத்துவது கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
பஸ் நிலையம், ரயில் நிலையம், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் அதிகமாகக் கூடும் பகுதிகளில் ஏர் ஹாரன் ஒலிக்கச் செய்வது பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி, விபத்துகளை உண்டாக்கும். திடீர் அதிக சத்தம் வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடையச் செய்து, விபத்துகளுக்கு வழிவகுக்கும்.
இத்தகைய ஹாரன்களைப் பயன்படுத்துவது ஒலி மாசு தடுப்புச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரியது, வாகன உரிமம் ரத்து செய்யப்படலாம். இவ்வாறு தஞ்சாவூர் நகர் பகுதியில் அதிக சப்தம் எழுப்பி வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் தஞ்சை ராமநாதன் ரவுண்டானா பகுதி அருகே மாவட்ட எஸ்.பி ராஜாராம் உத்தரவின் பேரில் நகர போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அந்த வழியாக வந்த அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களையும் தடுத்து நிறுத்தி அதிக சத்தம் எழுப்பக்கூடிய ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டுள்ளதா என சோதனை செய்தனர்.
இதில் ஏர்ஹாரன்கள் கண்டறியப்பட்ட பஸ்களில் இருந்த ஏர் ஹாரன்கள் அகற்றப்பட்டன. தொடர்ந்து அகற்றப்பட்ட ஏர் ஹாரன்களை அந்தந்த பஸ்களின் டயர்களுக்கு அடியில் வைத்து நொறுக்கப்பட்டன. அப்போது டிரைவர், கண்டக்டர்களிடம் ஏர்ஹாரன்களை உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் எடுத்துக் கூறினார்.
மேலும் முதன்முறை என்பதால் எச்சரிக்கை விடுக்கிறேன்.நாளையில் இருந்து ஏர்ஹாரன் உள்ள பஸ்களில் பறிமுதல் செய்வதோடு சம்பந்தப்பட்ட பஸ்களுக்கு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். இதேபோல் தஞ்சை நகரில் பல இடங்களில் போக்குவரத்து போலீசார் சோதனை நடத்தி கண்டறியப்பட்ட பஸ்களில் பொருத்தப்பட்டிருந்த அதிக சத்தம் எழுப்பக்கூடிய ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்து எச்சரித்தனர்.
மேலும் அந்த வழியாக வந்த லாரியில் டிரைவர் சீட் பெல்ட் அணிந்து வந்ததால் அவரை பாராட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் அவருக்கு வெகுமதி வழங்கினார்.























