தைரியத்துடனும், பெருமையுடனும் நெஞ்சம் நிமிர்ந்து நடை போடுங்கள்... ஊக்கமளித்த தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதன்
தமிழகத்திலேயே தலைநிமிர்ந்து நிற்கக்கூடிய கம்பீரமான மாநகராட்சியாக தஞ்சை திகழ்கிறது. ஊழியர்கள் அனைவரும் மிகுந்த தைரியத்துடனும், பெருமையுடனும், திமிருடனும் பணியாற்ற வேண்டும்.

தஞ்சாவூர்: தமிழகத்திலேயே தலைநிமிர்ந்து நிற்கக்கூடிய கம்பீரமான மாநகராட்சியாக தஞ்சாவூர் திகழ்கிறது. கடனே இல்லாத மாநகராட்சி நம்முடையது என்ற பெருமை கிடைத்துள்ளது. நம் மாநகராட்சி ஊழியர்கள் தைரியத்துடனும், பெருமையுடனும் நெஞ்சம் நிமிர்த்தி நடை போடுங்கள் என்று மேயர் சண்.ராமநாதன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். பின்னர் வளாகத்தில் உள்ள காந்திஜி சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் மேயர் சண்.ராமநாதன் பேச்சு செம ஹைலைட்டாக அமைந்தது. அவர் பேசியதாவது:

"தமிழகத்திலேயே தலைநிமிர்ந்து நிற்கக்கூடிய கம்பீரமான மாநகராட்சியாக தஞ்சை திகழ்கிறது. ஊழியர்கள் அனைவரும் மிகுந்த தைரியத்துடனும், பெருமையுடனும், திமிருடனும் பணியாற்ற வேண்டும். ஊழியர்களையும், அதிகாரிகளையும் அரவணைத்துச் செல்வதில் தஞ்சை மாநகராட்சி எப்போதும் முன்னுதாரணமாக இருக்கிறது. மாநகராட்சி ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த ஓய்வூதிய நிலுவைத்தொகைக்காக 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம் வரும் மாநகராட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசு தின பரிசாக நிலுவைத் தொகைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தஞ்சை மாநகரின் சாலைகள் மற்றும் தூய்மையைப் பார்த்து வெளியூரிலிருந்து வருபவர்கள் வியந்து பாராட்டுகின்றனர். சாலைகளின் தரம், குப்பைகள் இல்லாத நிலை ஆகியவற்றை பார்த்து "குப்பையில்லாத மாநகரம்" என்ற சிறப்பை சுற்றுலாப்பயணிகள் தெரிவிக்கின்றனர். திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், துணை மேயர், ஆணையர், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதால் இந்த முன்னேற்றம் சாத்தியமாகியுள்ளது. இந்தியாவிலேயே மிகச்சிறந்த மாநகராட்சியாக தஞ்சையை மாற்ற வேண்டும் என்பதே நமது இலக்கு. தமிழ்நாட்டில் உள்ள 10 மாநகராட்சிகளில் தஞ்சாவூர் மாநகராட்சி முதலிடத்தையும், அகில இந்திய அளவில் 14வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்தது.
தேசிய அளவில் 41வது இடத்தில் இருந்த தஞ்சாவூர், தற்போது 14வது இடத்திற்கு முன்னேறி சாதித்தது. இவ்வாறு அனைத்து பணிகளிலும் தஞ்சாவூர் மாநராட்சி பெரிய அளவில் சாதனை படைத்து வருகிறது. அதனால் மாநகராட்சி ஊழியர்கள் நெஞ்சம் நிமிர்த்தி நடை போடுங்கள். தூய்மைப்பணியிலும் நம் மாநகராட்சி சிறந்து விளங்குகிறது. சிட்டி 2.0வில் தஞ்சை மாநகராட்சி முதலிடம் பிடித்துள்ளது. இப்படி அனைத்திலும் நம் மாநகராட்சி கட்டிடம் போல் நம் உழைப்பு கம்பீரமாக உள்ளது. நம் மாநகராட்சியை மேலும் உயர்த்துவோம் என்ற உறுதி மொழியை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய 27 பேருக்கு விருது, கேடயம் மற்றும் சான்றிதழை மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் கண்ணன், மண்டலக்குழு தலைவர்கள் ரம்யா சரவணன், புண்ணியமூர்த்தி, கலையரசன் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் நகர்நல அலுவலர் நமச்சிவாயம் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Before You Go
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
ட்ரெண்டிங் செய்திகள்






















