இன்னும் அரை மணி நேரத்தில் ஸ்டார்ட்... 8 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு ஆரம்பம் ஆக உள்ளது
தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தலில் வாக்களிக்க 2,496 வாக்குச்சாவடி மையங்களும் தயார் நிலையில் உள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர்: வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் 2,496 வாக்குச்சாவடி மையங்கள் தயார் நிலையில் உள்ளன. பதற்றமானவை என்று கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் வாக்குகள் பதிவு தொடங்க உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தலில் வாக்களிக்க 2,496 வாக்குச்சாவடி மையங்களும் தயார் நிலையில் உள்ளது. அதே போல் மாவட்டம் முழுவதும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு நேற்று மாலை முதல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குப்பதிவுக்கு தேவையான உபகரணங்கள் ஆகியவற்றை வாக்குப்பதிவு அலுவலர்கள் வாகனங்களில் எடுத்துச் சென்றனர்.

தொகுதிக்கு ஒன்று என முன்மாதிரி வாக்குப் பதிவு மையங்கள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு முன்மாதிரி வாக்குப் பதிவு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த வாக்குப் பதிவு மையங்களில் வாக்காளர்களை கவரும் வகையில் தோரணங்கள், வாழைமரங்கள் கட்டப்பட்டு, சந்தனம், குங்குமம் போன்ற மங்கல பொருட்கள் வைத்து வரவேற்பளித்து வாக்களிக்க ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
அதன்படி தஞ்சாவூர் தொகுதியில் கரந்தை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, ஒரத்தநாடு தொகுதியில் ஒரத்தநாடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பட்டுக்கோட்டை தொகுதியில் பட்டுக்கோட்டை ஜெயலாயம் நகராட்சி நடுநிலைப் பள்ளி, பேராவூரணி தொகுதியில் சாணக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, திருவையாறு தொகுதியில் திருவையாறு ஜோசப் மேல்நிலைப் பள்ளி, பாபநாசம் தொகுதியில் சக்கராப்பள்ளி அங்கன்வாடி கட்டிடம், கும்பகோணம் தொகுதியில் கீழகொட்டையூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, திருவிடைமருதூர் தொகுதியில் திருவிடைமருதூர் திருவாவடுதுரை ஆதீனம் அம்பலவாண தேசிகர் நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது.
பெண்கள் மட்டும்... தனி வாக்குப்பதிவு மையங்கள்
அதே போல் பெண்களுக்கான சிறப்பு வாக்குச்சாவடி மையங்கள் தொகுதிக்கு ஒரு இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பெண்கள் மட்டுமே வாக்களிப்பார்கள், அதே போல் அங்கு பணியாற்றும் வாக்குப்பதிவு அலுவலர்கள் அனைவரும் பெண்களாக இருப்பார்கள்.
அதன்படி தஞ்சாவூர் தொகுதியில் மானம்புச்சாவடி பெண்கள் கிறித்துவ மேல்நிலைப் பள்ளி, ஒரத்தநாடு தொகுதியில் ஒரத்தநாடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பட்டுக்கோட்டை தொகுதியில் அதிராம்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, பேராவூரணி தொகுதியில் மாவடுகுறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, திருவையாறு தொகுதியில் திருவையாறு காமராஜ் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பாபநாசம் தொகுதியில் பாபநாசம் தூய பாஸ்டின் மெட்ரிக் பள்ளி, கும்பகோணம் தொகுதியில் சாக்கோட்டை செயின்ட் ஆண்டனீஸ் மெட்ரிக் பள்ளி, திருவிடைமருதூர் தொகுதியில் திருபுவனம் திகோ சில்க்ஸ் மெட்ரிக் பள்ளி ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மொத்த வாக்குச்சாவடிகள்
தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 309 வாக்குச்சாவடிகளில் 360 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், திருவையாறு தொகுதியில் 338 வாக்குச்சாவடிகளில் 405 வாக்குப்பதிவு இயந்திரங்களும், ஒரத்தநாடு தொகுதியில் 314 வாக்குச்சாவடிகளில் 376 இயந்திரங்களும், பட்டுக்கோட்டை தொகுதியில் 310 வாக்குச்சாவடிகளில் 372 இயந்திரங்களும், பேராவூரணி தொகுதியில் 284 வாக்குச்சாவடிகளில் 340 இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளது.
அதே போல் கும்பகோணம் தொகுதியில் 300 வாக்குச்சாவடிகளில் 360 வாக்குப்பதிவு இயந்திரங்களும், திருவிடைமருதூர் தொகுதியில் 326 வாக்குச்சாவடி மையங்களில் 391 வாக்குப்பதிவு இயந்திரங்களும், பாபநாசம் தொகுதியில் 315 வாக்குச்சாவடி மையங்களில் 378 வாக்குப் பதிவு இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் கூடுதலாக 20 சதவிகித மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
மொத்தம் மாவட்டம் முழுவதும் 8 தொகுதிகளில் 2,496 வாக்குச்சாவடி மையங்களில் 2,992 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுகிறது. 3,242 ஒப்புகை சீட்டை காட்டும் இயந்திரங்களும் பயன்படுத்தப்படவுள்ளது. ஒவ்வொறு வாக்குச்சாவடி மையங்களிலும் பந்தல், சாய்வுதளம், குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
பதற்றமானவை என கண்டறியப்பட்டவை
மாவட்டம் முழுவதும் 84 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளதால், அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் அங்கு கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பாதுகாப்பு பணியில் மாவட்டம் முழுவதும் 4 ஆயிரம் போலீஸாரும், 500 மத்திய துணை ராணுவத்தினரும், 12 ஆயிரம் தேர்தல் பணியாளர்களும் ஈடுபடுகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்





















