மாற்றுப்பயிரில் முத்திரை பதிக்கும் விவசாயிகள்... கோடை சாகுபடியில் ஆர்வம்
டெல்டா மாவட்டங்களில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் குறுவை, சம்பா மற்றும் தாளடி ஆகிய முதன்மைச் சாகுபடிகளைத் தொடர்ந்து, பம்ப் செட் நீர் வசதி உள்ள பகுதிகளில் கோடை காலச் சாகுபடி செய்யப்படுவது வழக்கம்

தஞ்சாவூர்: தஞ்சை அருகே வேங்கராயன்குடிக்காட்டில் டிராக்டர்கள் மூலம் கோடை சாகுபடிக்காக வயலை உழும் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மாற்றுப்பயிர் சாகுபடியில் இப்பகுதி விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் மாவட்டத்தில், நடப்பு ஆண்டுக்கான கோடை காலப் பயிர் சாகுபடிப் பணிகள் தற்போது முழு வீச்சில் தொடங்கியுள்ளன. இதன்படி தஞ்சாவூர் அருகே வேங்கராயன் குடிக்காடு கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடை சாகுபடிக்காக விளைநிலங்களை ஆயத்தப்படுத்தும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
டெல்டா மாவட்டங்களில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் குறுவை, சம்பா மற்றும் தாளடி ஆகிய முதன்மைச் சாகுபடிகளைத் தொடர்ந்து, பம்ப் செட் நீர் வசதி உள்ள பகுதிகளில் கோடை காலச் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். தற்போது வேங்கராயன் குடிக்காடு பகுதி விவசாயிகள் தங்களது நிலங்களைச் கோடை சாகுபடிக்காக வயல்களை சீரமைப்பதில் தீவிரக் கவனம் செலுத்தி வருகின்றனர்.
விளைநிலங்களில் உள்ள முந்தைய பயிர்களின் தாள்களை அழித்து, மண்ணை வளப்படுத்துவதற்காக டிராக்டர்கள் மற்றும் சுழற்கலப்பைகள் மூலம் ஆழ உழவு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு கோடையில் ஆழமாக உழுவதால் மண்ணின் கீழ் அடுக்கு மேலே கொண்டு வரப்பட்டு, மண் பொலபொலப்புத் தன்மை அடைகிறது.
மண்ணில் காற்றோட்டம் அதிகரித்து, நுண்ணுயிரிகளின் பெருக்கம் சீராகிறது. முந்தைய பயிர்களின் வேர்களில் தங்கியிருக்கும் பூச்சிகளின் முட்டைகளும், கூட்டுப்புழுக்களும் வெயிலின் தாக்கத்தால் அழிக்கப்படுகின்றன. தற்போது தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இதை பயன்படுத்தி வயல்களை உழும் பணிகள் நடந்து வருகிறது.
குறைந்த நீர் தேவையும், அதிக லாபமும் தரக்கூடிய பயிர்களைப் பயிரிட வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளதால், இப்பகுதி விவசாயிகள் இந்த ஆண்டு மாற்றுப் பயிர்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். தண்ணீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில் உளுந்து, பச்சைப்பயறு மற்றும் எள் போன்ற பயிர்களைப் பயிரிடப் பெரும்பாலான விவசாயிகள் ஆர்வம் காட்டி நிலத்தை உழும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பலரும் நெல் சாகுபடியையும் மேற்கொள்கின்றனர்.
இதுகுறித்து வேங்கராயன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் தரப்பில் கூறியதாவது: "தற்போது உழவுப் பணிகளை முடித்துவிட்டு அடுத்த கட்டமாக விதைப்பு மற்றும் நாற்று நடும் பணிகளுக்குத் தயாராகி வருகிறோம். கோடை சாகுபடிக்குத் தேவையான தரமான சான்றளிக்கப்பட்ட விதைகள், அடி உரங்களான டி.ஏ.பி., பொட்டாஷ் மற்றும் யூரியா போன்றவை தட்டுப்பாடின்றி கிடைக்க மாவட்ட நிர்வாகமும், வேளாண் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்





















