திருச்சியை உற்று நோக்குமா தலைநகர் டெல்லி... 4 எம்.பி.க்களின் குரல் இனி அதிரடிக்குமா?
ஒரு மாவட்டத்திற்கு நான்கு எம்பிக்கள் ஒரு சேர குரல் கொடுக்கிறார்கள் என்பதை பார்த்து மத்திய அரசு எந்தத் திட்டத்தையும் கிடப்பில் போடமல் உடனே செயல்படுத்த நடவடிக்கை எடுக்கும்... மக்கள் எதிர்பார்ப்பு

தஞ்சாவூர்: எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது திருச்சிக்கு நான்கு எம்பிக்கள் கிடைத்துள்ளனர். இதனால் மக்களின் குறைகள் தீர்க்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் 2வது தலைநகராக திருச்சியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவடைந்து வருகிறது.
கோரிக்கைகள் வலுவடைவது மட்டுமல்ல. பிற மாநிலங்களும் திருச்சியை உற்று நோக்கும் வகையில் மிக வேகமான வளர்ச்சியை திருச்சி பெற்று வருகிறது என்றால் மிகையில்லை. திருச்சியின் வளர்ச்சிக்கு அஸ்திவாரம் போட்டது போல் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து வளாகம் அமைந்தது. தொடர்ந்து இணைப்பு சாலைகள் உட்பட பல்வேறு வசதிகள் செய்து தரும் பணிகள் மிக விரைவாக நடந்து வருகிறது. பஞ்சப்பூர் பகுதியிலேயே ஐ.டி.பார்க், ஒருங்கிணைந்த காய்கறி மார்க்கெட் வளாகம் என்று மக்களின் தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

மாநிலங்களவை தேர்தல் அறிவிப்பு
தமிழகத்தில் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள தம்பிதுரை, ஜி.கே.வாசன், என்.ஆர்.இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, பி.செல்வராசு ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ந் தேதியுடன் முடிகிறது. இந்த 6 எம்.பி.க்கள் காலியிடங்களை நிரப்ப தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது. தற்போதுள்ள எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை அடிப்படையில் தி.மு.க. சார்பில் 4 எம்.பி.க்களையும், அ.தி.மு.க. சார்பில் 2 எம்.பி.க்களையும் போட்டியின்றி தேர்வு செய்ய முடியும். தி.மு.க. தங்களுடைய கூட்டணியில் உள்ள காங்கிரஸ், தே.மு.தி.க.வுக்கு தலா ஒரு இடத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.
தி.மு.க. தன்னிடம் உள்ள 2 எம்.பி.க்கள் இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. அதன்படி, திருச்சி சிவா, ஜே.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. வேட்பாளராக திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் திலக் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். தே.மு.திக. சார்பில் பொருளாளர் சுதீஷ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி 2வது தலைநகராக்கப்படுமா?
திருச்சியை தமிழ்நாட்டின் இரண்டாவது தலைநகராக ஆக்க வேண்டும் என தொடர்ந்து அரசியல் கட்சியில் குரல் கொடுத்து தேர்தல் அறிக்கையில் இடம் பெற வைக்க வேண்டும் எனவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சிக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ மற்றும் மாநிலங்களவையை சேர்ந்த திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா ,பெண்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்ற அடிப்படையில் திமுகவின் எம்.பி சல்மா ஆகிய மூன்று எம்பிக்களை திருச்சி கைவசம் வைத்துள்ளது. இந்நிலையில் தற்பொழுது மாநிலங்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பாக திருச்சியை கிறிஸ்டோபர் திலக் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவரும் தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவார்.
மத்திய பகுதியான திருச்சிக்கு கிடைத்த 4 எம்.பி.க்கள்
இதனால் தமிழ்நாட்டின் மத்திய பகுதியாக இருக்கும் திருச்சிக்கு நான்கு எம்பிக்கள் கிடைத்துள்ளது மிகப்பெரிய வரப்பிரசாதம். திருச்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் ஏராளமானவை உள்ளன. மிக முக்கியமாக மத்திய அரசிடம் பேசி துவாக்குடி பால்பண்ணை அணுகு சாலை. பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் அரை சுற்றுவட்டச் சாலை பணிகளை முழுவதும் முடித்து போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய வேண்டும். மாநகரில் முக்கியமாக இரண்டு பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த இரண்டு பாலத்தையும் விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர இந்த எம்பிக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் வலுவான கோரிக்கையான உள்ளது.
திருச்சி பக்கம் இந்தியாவின் தலைநகர் பார்வை திரும்புமா?
தற்பொழுது கிடைத்துள்ள நான்கு எம்பிக்களும் திமுக கூட்டணி கட்சியினரின் எம்பிக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தொடர்ந்து மக்களின் பல ஆண்டுகால குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்து புதிய வேலைவாய்ப்பு தரும் திட்டங்களை உருவாக்கி திருச்சி மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு மாவட்டத்திற்கு நான்கு எம்பிக்கள் ஒரு சேர குரல் கொடுக்கிறார்கள் என்பதை பார்த்து மத்திய அரசு எந்தத் திட்டத்தையும் கிடப்பில் போடமல் உடனே செயல்படுத்த நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையும் திருச்சி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.























