தஞ்சாவூரில் சீறி பாய்ந்த காளைகளை பாய்ந்து, பாய்ந்து அடக்கிய இளம் காளைகள்
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக தஞ்சாவூர், வல்லம், புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி என பல மாவட்டங்களிலிருந்து 800 காளைகள் பதிவு செய்யப்பட்டன.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே ராமநாதபுரம் ஊராட்சியில் இன்று காலை ஜல்லிக்கட்டு விழா நடந்தது. இதனை தஞ்சாவூர் கோட்டாட்சியர் இலக்கியா தொடக்கி வைத்தார். சீறிப்பாய்ந்த காளைகளை வாலிபர்கள் அடக்கினர். இதில் மொத்தம் 47 பேர் காயமடைந்தனர்.
தஞ்சாவூர் அருகே ராமநாதபுரம் ஊராட்சி திரௌபதை அம்மன் கோவில் திடலில் ஜல்லிக்கட்டு விழா தொடங்கியது. இதை கோட்டாட்சியர் இலக்கியா உறுதிமொழியை வாசித்து தொடங்கி வைத்தார். உறுதிமொழியை மாடு பிடி வீரர்களும் ஏற்றுக் கொண்டனர். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக தஞ்சாவூர், வல்லம், புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி என பல மாவட்டங்களிலிருந்து 800 காளைகள் பதிவு செய்யப்பட்டன.
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளை தஞ்சை கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்கள் பரிசோதனைக்குப் பிறகு அனுமதித்தனர். வாடிவாசலில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை ஒரு அடி உயரத்திற்கு தென்னை நார்கள் பரப்பப்பட்டன. காளைகளும், வீரர்களுக்கும் கீழே விழுந்தாலும் காயம் ஏற்படாமல் இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. காளைகள் பார்வையாளர் பகுதிக்குள் சென்று விடாமல் இருப்பதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டன.
மாடு பிடி வீரர்களை களத்துக்குள் அனுப்புவதற்கு தனி பாதை ஏற்படுத்தப்பட்டது. வீரர்கள் காயம் அடைந்தால் உடன் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்பட்டது. ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்கான விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது. இதன்படி ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாட்டின் உரிமையாளர் மற்றும் மாடுபிடி வீரர்கள் இணையத்தில் தங்களை பற்றி பதிவு செய்து கொண்டனர்.
ஆன்லைன் டோக்கன் முறைப்படி வரிசையாக மட்டுமே காளைகள் உள்ளே அனுமதிக்கப்பட்டன. தொடர்ந்து காளைகள் ஒவ்வொன்றாகப் வாடிவாசலிருந்து அவிழ்த்து விடப்பட்டது. காளைகளைப் பிடிப்பதற்காக 420 வீரர்கள் பதிவு செய்திருந்து களமிறங்கினர். காளைகளை பிடிக்க இளம் காளையர்கள் போட்டி போட்டனர். சில காளைகள் சுற்றி சுழன்று தங்களை பிடிக்க வந்த வீரர்களை மிரள வைத்தன. பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட எஸ்.பி.. ராஜாராம் உத்தரவின் பேரில், வல்லம் டி.எஸ்.பி., கணேஷ் குமார் தலைமையில் 300 க்கும் மேற்பட்ட போலீசார் செய்திருந்தனர்.
சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்களுக்கு செல்போன், வெள்ளிக்காசு, சைக்கிள், எவர்சில்வர் பொருட்கள், கட்டில், பீரோ போன்ற ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் வெற்றிப் பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. காளைகளை அடக்கும் போது 47 பேர் காயமடைந்தனர். ஏற்பாடுகளை திரௌபதையம்மன் ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் கிராம நாட்டாண்மைக்காரர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

