தஞ்சாவூரில் பறக்கும்படை அதிரடி: மூட்டை மூட்டையாக சிக்கிய எவர்சில்வர் டப்பாக்கள்! தேர்தல் நேரத்தில் பரபரப்பு
தஞ்சை வ.உ.சி.நகரில் உள்ள ஒரு பார்சல் சர்வீஸ் சென்டரில் விற்பனைத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது அங்கு சில மூட்டைகள் இருந்தன.

தஞ்சாவூர்: மூட்டை மூட்டையாக சிக்கிய எவர்சில்வர் டப்பாக்களை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அவற்றை திருப்பி அளித்தனர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்தமாதம்(ஏப்ரல்) 23-ந் தேதி நடக்கிறது. வாக்காளர்களை கவரும் வகையில் பணம் அல்லது பரிசுப்பொருட்கள் கொண்டு செல்வதை தடுப்பதற்காக பறக்கும்படையினரும், நிலையான கண்காணிப்புக்குழுவினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் 72 பறக்கும்படையினரும், 72 நிலையான கண்காணிப்புக்குழுவினரும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சை வ.உ.சி.நகரில் உள்ள ஒரு பார்சல் சர்வீஸ் சென்டரில் விற்பனைத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது அங்கு சில மூட்டைகள் இருந்தன. அந்த மூட்டைகளில் என்ன இருக்கிறது? என அதிகாரிகள் கேட்டபோது, எவர்சில்வர் டப்பாக்கள்(சம்படம்) இருப்பதாக தெரிவித்தனர். அதற்கு உரிய ஆவணங்கள் இருக்கிறதா? என கேட்டபோது, சரியான பதில் இல்லை. இதனால் இது குறித்து பறக்கும்படையினருக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
உடன் பள்ளி கல்வித்துறை ஆய்வாளர் ஜேக்கப் வினோத் தலைமையிலான பறக்கும்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் வைக்கப்பட்டு இருந்த எவர்சில்வர் டப்பாக்களை பறிமுதல் செய்து மினிலாரியில் ஏற்றி கொண்டு தஞ்சை தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர்.
பின்னர் அந்த எவர்சில்வர் டப்பாக்கள் எல்லாம் தலைமையிடத்து துணை தாசில்தார் சரவணன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் வினோத் ஆகியோரிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். மொத்தம் 1,000 எவர்சில்வர் டப்பாக்கள் ஒப்படைக்கப்பட்டன. இந்த சில்வர் டப்பாக்கள் அடங்கிய மூட்டைகளை மினிலாரியில் இருந்து தாசில்தார் அலுவலகத்தில் இறக்கி வைக்கப்பட்டது. இதற்கிடையில் எவர்சில்வர் டப்பாக்களுக்கான உரிய ஆவணங்களை சம்பந்தப்பட்ட நபர்கள் கொண்டு வந்து அதிகாரிகளிடம் காண்பித்தனர். இதையடுத்து அந்த எவர்சில்வர் டப்பாக்கள் சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.60 ஆயிரம் பறிமுதல்
தஞ்சை அம்மன்பேட்டை பைபாஸ் சாலையில் ஜாய் செபஸ்டின் மேரி தலைமையிலான நிலையான கண்காணிப்புக்குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வியாபாரி ஒருவரை அதிகாரிகள் வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் ரூ.60 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பணம் பழைய இரும்பு கடைக்கு எடுத்து செல்வதாக அந்த வியாபாரி கூறினார். ஆனால் அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.60 ஆயிரத்தை வியாபாரியிடம் இருந்து நிலையான கண்காணிப்புக்குழுவினர் பறிமுதல் செய்தனர். பின்னர் இந்த பணம் தஞ்சை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. தமிழக சட்டசபை தேர்தல் தேதியானது கடந்த 15-ந் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.
இதனால் அன்று மாலை முதல் தேர்தல் நடத்தை வழிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. இதையடுத்து 15-ந் தேதி மாலை முதல் தஞ்சை சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, இதுவரை தஞ்சை சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரூ.13 லட்சத்து 99 ஆயிரத்து 226 உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த பணத்திற்கு உரிய ஆவணங்களை காண்பித்தால் உரியவரிடம் திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.























