சூப்பருங்க... நல்ல விஷயம்: சுற்றுலாப்பயணிகள் பாராட்டுவது எதற்காக?
பெரிய கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் சிரமமின்றி நடப்பதற்காக கோயில் வெளி பிரகாரங்களில் நடைவிரிப்புகளில் கோயில் ஊழியர்கள் பைப் மூலம் தண்ணீர் தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயிலில் கோடை வெயிலை சமாளிக்கும் விதமாகவும், பக்தர்கள் நடந்து செல்லும் போது வெயில் சூடு தெரியாமல் இருப்பதற்காகவும் நடை விரிப்புகளில் தண்ணீர் தெளிக்கும் பணி நடந்தது.
உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டப்பட்ட இந்த கோயில் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டிடக் கலைக்கும், சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கோயிலை காண தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

தஞ்சாவூரில் காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோயில், ராஜராஜேச்சரம், பெருவுடையார் கோயில், பிரஹதீஸ்வரர் ஆலயம் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. இக்கோயிலின் தலைமைச் சிற்பியாக குஞ்சர மல்லன் ராஜராஜப்பெருந்தச்சன் என்ற பெயர் கோயிலின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகிறது.
தொழில்நுட்பம் வளராத அந்த காலகட்டத்தில் இப்படி ஒரு பிரமாண்ட கோயிலை காட்டியது உலக அதிசயமாக பார்க்கப்படுகிறது. 10ம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும் பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்ட காலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக்கோயில், 17, 18ம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிரகதீசுவரம் ஆனது.
இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் ராஜராஜ சோழன் என்றால் மிகையில்லை.
பெரிய கோயில் தொல்லியல் துறை, தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் என மூன்று நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகளவில் உள்ளதால் பெரிய கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் சிரமமின்றி நடப்பதற்காக கோயில் வெளி பிரகாரங்களில் நடைவிரிப்புகளில் கோயில் ஊழியர்கள் பைப் மூலம் தண்ணீர் தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பக்தர்கன் நடந்து செல்ல வசதியாக நடைப் பாதையில் தேங்காய் நார் விரிப்பு போடப்பட்டுள்ளது. இதில் கோயில் ஊழியர்கள் தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் ஊற்றி குளிர்ச்சியான சூழலை உருவாக்கி வருகின்றனர். பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி கோயிலை வலம் வந்து நீண்ட வரிசையில் காத்து நின்று பெருவுடையாரை தரிசனம் செய்து செல்கின்றனர்.
கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் தாக்கம் அதிகம் உள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகையும் அதிகம் உள்ளது. இதனால் வெயில் தாக்கம் தெரியாமல் இருக்க கோயில் நிர்வாகம் சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.





















