தஞ்சாவூர் பெரிய கோயில் கோபுரத்தில் ஒரு மாதமாக எரியாத விளக்கு: அதிகாரிகளின் கவனத்திற்கு வராதது ஏன்?
பெரிய கோயில் கோபுரத்தின் உச்சியில் ஒளிரும் விளக்கு தஞ்சை மாநகரம் மட்டுமின்றி பைபாஸ் சாலையில் இருந்து பார்த்தாலும் கோயில் பளிச்சென்று தெரியும் வகையில் இருந்து வந்தது.

தஞ்சாவூர்: கடந்த ஒருமாதமாக தஞ்சாவூர் பெரிய கோயில் கோபுரத்தின் உச்சியில் மின் விளக்கு எரியாமல் உள்ளது எந்த அதிகாரிகளின் கண்ணிலும் படவில்லையா என்று பக்தர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தஞ்சை பெரிய கோயில் என்றாலே போதும் உலக மக்கள் மத்தியில் வெகு பிரசித்தம். தஞ்சை தரணி மக்களாலும் உலக தமிழர்களாலும் பெருமிதத்துடன் அழைக்கப்படும் பெரிய கோயில் என்கிற பிரகதீஸ்வரர் கோவில் கி.பி 1006ம் ஆண்டில் மாமன்னன் ராஜராஜசோழனின் ஆட்சியில் கட்டப்பட்டது. இன்றளவும் தமிழரின் கலை, அறிவியல் மற்றும் கட்டடக்கலைக்கு சான்றாக விண்ணுயர்ந்து யுனெஸ்கோவின் பாரம்பரிய கலை மற்றும் பண்பாட்டு சின்னமாகவும் அரிய பொக்கிஷமாகவும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இக்கோயில் உலக நாட்டவர்களையும் கவர்ந்திழுக்க முக்கிய காரணம் கட்டுமானம்தான் என்றால் மிகையில்லை. பெரியகோவிலை ஆராய்ச்சி செய்யும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் துணையுடன் அக்குவேறு ஆணிவேராக ஆராய்ச்சி செய்தாலும் கட்டுமான ரகசியம் இன்னும் பிடிபடாமல்தான் உள்ளனர். கரிகால் சோழனால் கட்டப்பட்ட கல்லணையைப் பற்றிய முழுமையான ரகசியம் எப்படி பிடிபடவில்லையோ, அதே போல் தான் பெரிய கோவிலின் கட்டுமான ரகசியமும் இன்னமும் யாருக்கும் விளங்கவில்லை என்பது தான் உண்மை.
இக்கோவில் கட்டப்பட்ட விதமும், அதற்கு பயன்படுத்தப்பட்ட தூய்மையான கிரானைட் கற்களும் தான். கிரானைட் கற்கள் 20ம் நூற்றாண்டில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது என்ற நினைப்பை முறியடித்து சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பே கிரானைட் கற்கள் கொண்டு இக்கோவில் பயன்படுத்தப்பட்டுள்ளது ஆச்சரியம் தானே.
கருவறையின் மேலுள்ள விமானம், அதனைத் தாங்கும் சதுர வடிவிலான கற்கள், அதோடு சுற்றிலும் உள்ள 8 லிங்கங்கள் என இந்த மூன்றும் தான் ஒட்டு மொத்த கோவிலையும் தாங்கும் அஸ்திவாரமாக இருக்கின்றது என்பது தான் ஆச்சரியத்தின் உச்சமாகும். கோயிலின் கட்டுமானத்தில் அடியிலிருந்து கற்களை ஒவ்வொன்றாக நூலளவு இடைவெளி விட்டு மிகவும் இலகுவாக அடுக்கும்போது, கற்கள் பாரம் தாங்காமல் இறுக ஆரம்பித்து விடும். இந்த தொழில்நுட்பம்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்கிறார்கள். முழு கட்டுமானத்தையும் முடித்து கருவறை உச்சியில், மிகப்பிரமாண்டமான 80 டன் எடைகொண்ட, சதுர வடிவ கல், நந்தி, விமானம் என 240 டன் எடையை அழுந்தச் செய்வதன் மூலமாக பெரிய கோவிலின் ஒட்டுமொத்த கட்டுமானமும் பலம் பெற்றுவிடும். இப்படித்தான் பெரிய கோவிலின் அஸ்திவாரத்தை ஒட்டுமொத்தமாக கருவறை உச்சியில் கொண்டுபோய் வைத்தார்கள் அன்றைய நம் தமிழர்கள். இத்தகைய அதிசயங்களையும், அற்புதங்களையும் தன்னுள் கொண்ட மாமன்னன் ராஜராஜ சோழன் எழுப்பிய பெரிய கோயில், வரலாற்றில் நீங்காத இடம் பெற்ற ஒன்றாகும்.
இத்தகைய சிறப்பு மிக்க இக்கோயிலுக்கு தினமும், காலை, மாலை, இரவு என வெளிமாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பெரிய கோயில் கோபுரத்தின் உச்சியில் ஒளிரும் விளக்கு தஞ்சை மாநகரம் மட்டுமின்றி பைபாஸ் சாலையில் இருந்து பார்த்தாலும் கோயில் பளிச்சென்று தெரியும் வகையில் இருந்து வந்தது. இந்நிலையில் இந்த கோபுரத்தில் எரிந்து வந்த விளக்கு கடந்த ஒருமாதமாக எரியவில்லை. இதனால் கோயிலை சுற்றிலும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எப்போதும் பளிச்சென்று இருக்கும் பெரிய கோயில் பகுதி தற்போது இருள் சூழ்ந்து காணப்படுவதால் இரவு நேரத்தில் கோபுர தரிசனம் பார்க்க வரும் பக்தர்கள் வேதனையடைந்து வருகின்றனர்.
கடந்த ஒரு மாதமாக இதே நிலை நீடிக்கிறது. இது எந்த அதிகாரிகளின் கண்ணிலும் படவில்லையா. ஏன் உடனடியாக இந்த விளக்கை மாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பக்தர் கேள்வி எழுப்புகின்றனர்.























