தஞ்சாவூரில் கொந்தளிப்பு! பாஜகவை கண்டித்து திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்
மத்திய பா.ஜ.க அரசு கடந்த 11 ஆண்டுகளில் தமிழகத்திற்கு என்று எந்த ஒரு நல்ல வளர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என்று தி.க. தலைவர் வீரமணி ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.

தஞ்சாவூா்: தமிழகத்தை வஞ்சித்து வரும் மற்றும் சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்காத மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தஞ்சாவூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாட்டிற்கு எந்த திட்டங்களையும் கொண்டு வராமல் வஞ்சித்து வரும் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்காத மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன்படி தஞ்சையில் மத்திய மாவட்ட ,மாநகர மதச்சார்பற்ற கூட்டணிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்றது. மாநகர தி.மு.க செயலாளர் மேயர் சண் ராமநாதன் வரவேற்றார். மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் துரை சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.ஜி.நீலமேகம் எம்.எல்.ஏ, செல்வம், மாவட்ட அவைத் தலைவர் இறைவன், மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் ஜித்து, துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தி.க. தலைவர் கி. வீரமணி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: மத்திய பா.ஜ.க அரசு கடந்த 11 ஆண்டுகளில் தமிழகத்திற்கு என்று எந்த ஒரு நல்ல வளர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. தற்போது தேர்தல் வருவதால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருகிறார். அவர் வரும்போதெல்லாம் தி.மு.க கூட்டணிக்கு ஓட்டுகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியில் அனைவரும் பயன் அடைந்துள்ளனர். இந்தியாவிலேயே நம்பர் ஒன் முதலமைச்சர் நமது முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தான் என்று உலக நாடுகளே புகழாரம் சூட்டுகின்றன . அந்த அளவிற்கு தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றுள்ளார்.
கடந்த மாதத்தில் மகளிர் உரிமை திட்டத்தை பறிக்க சூழ்ச்சி நடைபெற்றது. அந்த சூழ்ச்சியை முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் முறியடித்து மகளிர்களுக்கு மூன்று மாதங்களுக்கான உரிமைத் தொகையை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தி விட்டார் . மேலும் கோடைகால சிறப்பு தொகையும் வழங்கினார். எதிரிகள் எவ்வளவு சூழ்ச்சிகள் செய்தாலும் அதனை முதலமைச்சர் முறியடித்து விடுவார்.
கடந்த 2020 ஆம் ஆண்டில் மத்திய அரசு ரயில்வே பணிகளுக்கு 7000 கோடி ஒதுக்கியது . ஆனால் தமிழகத்திற்கு ஒதுக்கியது வெறும் 1000 ரூபாய் தான். இதேபோல் மும்மொழி கொள்கையை அமல்படுத்தினால் தான் கல்வி வளர்ச்சி நிதியை ஒதுக்க முடியும் என மத்திய அரசு கூறி வருகிறது . ஆனால் தமிழகத்தில் எப்போதுமே மும்மொழிக்கு அனுமதி கிடையாது என முதலமைச்சர் திட்டவட்டமாக கூறிவிட்டார் . மேலும் ஆண்டுதோறும் தேசிய பேரிடர் நிதி புயல், மழையால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும். ஆனால் தமிழகத்தில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட நேரங்களில் எல்லாம் அதனை கணக்கெடுத்து அதற்கு உரிய தொகையை தமிழக அரசு கேட்கும் போது கேட்ட தொகையை வழங்காமல் சொற்ப அளவிலேயே வழங்கி தொடர்ந்து மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.
ஆனால் இதையெல்லாம் கடந்து தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை நாளுக்கு நாள் முன்னேற்றிக்கொண்டே செல்கிறார் நமது முதலமைச்சர். அவருக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். கண்டிப்பாக தேர்தலில் தி.மு.க கூட்டணி தான் வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய பா.ஜ.க அரசு கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. சமையல் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அப்போது சிலிண்டருக்கு மாலை அணிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் மகேந்திரன், தி.க. மாநில பொதுச் செயலாளர் ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் அமர்சிங், தி.மு.க மாவட்ட பொருளாளர் அண்ணா, மாவட்டத் துணைச் செயலாளர்கள் மணிமாறன், புண்ணியமூர்த்தி, கனகவல்லி பாலாஜி , ம.தி.மு.க தெற்கு மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், மாநகர செயலாளர் துரைசிங்கம் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சக்திவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன் , விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர மாவட்ட செயலாளர் இடிமுரசு இலக்கணன், தேமுதிக மாநகர மாவட்ட செயலாளர் சிவநேசன் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த அனைத்து நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















