தஞ்சை மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கோடை மழை... ஆட்டுக்கிடை அமைத்தவர்கள் பரிதாப நிலை
கோடை மழையின் காரணமாக கோடையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், உளுந்து, எள், கடலை, பருத்தி ஆகிய பயிர்களுக்கு மிகுந்த பயன்உள்ளதாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை கொட்டி தீர்த்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். முக்கியமாக கடந்த 10 நாட்களாக இருந்து வந்த வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் உருவானது. இருப்பினும் அறுவடை முடிந்த வயல்களில் ஆட்டுக்கிடை அமைத்து இருந்தவர்கள் மட்டும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கி நேற்று காலை பரவலாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் அதிகமாக இருந்ததால் மக்கள் அவதிக்கு உள்ளாகி வந்தனர். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். இதனால் இளநீர், பதநீர், நுங்கு, வெள்ளரி, குளிர்பானங்கள் விற்பனை அமோகமாக நடந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கி காலை வரை இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக கோடையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், உளுந்து, எள், கடலை, பருத்தி ஆகிய பயிர்களுக்கு மிகுந்த பயன்உள்ளதாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு வருமாறு: பேராவூரணி 63 மி.மீட்டர், ஒரத்தநாடு 54, பூதலூர் 51, வல்லம் 45, மதுக்கூர் 45, வெட்டிக்காடு 44, அய்யம்பேட்டை 38, திருவையாறு 31, பாபநாசம் 29, அணைக்கரை 20, திருக்காட்டுப்பள்ளி 19, தஞ்சாவூர் 19, கல்லணை 17, குருங்குளம் 12, நெய்வாசல் 12, அதிராம்பட்டினம் 11, கும்பகோணம் 8, திருவிடைமருதூர் 6, மஞ்சளாறு 6 என மாவட்டம் முழுவதும் மழை பதிவாகியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி நெல் அறுவடை முடிந்த வயல்களில் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து ஆட்டுக்கிடை போட்டுள்ளனர். விளைநிலங்களின் மண் வளத்தை அதிகரிக்கவும், இயற்கை உரம் மூலம் மகசூலை உயர்த்தவும் அறுவடை முடிந்த வயல்களில் ஆட்டுக்கிடை அமைத்தல் ஒரு சிறந்த பாரம்பரிய முறையாகும். ஆடுகள் இரவு நேரத்தில் வயல்களில் தங்கி, புழுக்கை மற்றும் சிறுநீர் கழிப்பதன் மூலம், நிலத்திற்குத் தேவையான தழை, மணி, சாம்பல் சத்துக்கள் இயற்கையாகக் கிடைக்கின்றன. பொதுவாக செம்மறி ஆடுகள் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆட்டு உரிமையாளர்கள் வயல்வெளிகளில் சிறு குடில் அமைத்து தங்கி, ஆடுகளைக் காவல் காப்பார்கள். இந்த முறையால் மண் வளத்தைப் பேணிக்காத்து, கூடுதல் மகசூல் பெற உதவுகிறது.
அவ்வாறு ஆட்டுக்கிடை அமைத்து இருந்தவர்கள் இந்த கனமழையால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் இடி, மின்னல் ஆகியவற்றால் ஆடுகள் மிரண்டு பட்டிக்குள் ஓடியபடியே இருந்ததால் ஆட்டுக்கிடை அமைத்து இருந்தவர்கள் அவதியடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்





















