பேரிடர் வந்தாலும் பதறாதீங்க மாணவாஸ்... என்ன செய்யணும்? செய்முறை பயிற்சி நிறைவு
பயிற்சியில் பங்கேற்ற என்.எஸ்.எஸ்., என்.சி.சி. மற்றும் மை பாரத் மாணவர்களுக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ்கள் மற்றும் பேரிடர் காலங்களில் பயன்படுத்தக்கூடிய அவசரகால உபகரணங்கள் வழங்கப்பட்டன.

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடத்தப்பட்ட 7 நாள் பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புப் பயிற்சி முகாம் நிறைவடைந்தது.
இயற்கை மற்றும் மனிதர்களால் ஏற்படும் பேரிடர்களின் தாக்கத்தை குறைத்து, உயிர் மற்றும் உடைமை இழப்புகளைத் தடுக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடத்தப்பட்ட 7 நாள் பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புப் பயிற்சி முகாம் நிறைவடைந்தது. இதன் நிறைவு விழா நேற்று கும்பகோணத்தில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் திருமலை தலைமை தாங்கினார். தாசில்தார் பூங்கொடி மற்றும் திருவாரூர் பேரிடர் மேலாண்மை தாசில்தார் ஜெயசித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரிடர் மேலாண்மை என்பது அரசு அதிகாரிகளின் பொறுப்பு மட்டுமல்ல; பொதுமக்களும், குறிப்பாக மாணவர்களும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதையே இப்பயிற்சி வலியுறுத்தியது.
பேரிடர் மேலாண்மை என்றால் என்ன?
பேரிடர் மேலாண்மை என்பது வெள்ளம், புயல், நிலநடுக்கம், சுனாமி, தீவிபத்து, இடி மின்னல், ரசாயன கசிவு உள்ளிட்ட பேரிடர்களுக்கு முன்பே தயாராக இருப்பது, பேரிடர் நேரத்தில் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது மற்றும் அதன் பின்னர் மீட்பு மற்றும் மறுவாழ்வு பணிகளை விரைவாக மேற்கொள்வது போன்ற செயல்முறைகளின் ஒருங்கிணைந்த அமைப்பாகும்.
ஒரு பேரிடர் ஏற்பட்ட பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை விட, பேரிடர் ஏற்படுவதற்கு முன்பே என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பேரிடர் மேலாண்மையின் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் உயிரிழப்புகளையும், பொருளாதார இழப்புகளையும் கணிசமாகக் குறைக்க முடியும்.
செய்முறை பயிற்சியுடன் விழிப்புணர்வு
இந்த 7 நாள் பயிற்சியில், தீயணைப்பு அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை பயிற்றுநர் காந்தி தலைமையிலான குழுவினர், தஞ்சாவூர் மாவட்ட யுவா ஆப் த மித்ரா முதன்மை பயிற்றுநர் கணேசன், டாக்டர் சந்தோஷ் மற்றும் அவரது குழுவினர், நாட்டு நலப்பணித் திட்ட பயிற்றுநர் அம்பலத்தரசு உள்ளிட்டோர் பயிற்சி வழங்கினர்.
பயிற்சியின் போது, பேரிடர் காலங்களில் மக்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும், பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக மீட்பது எப்படி, அவசர காலங்களில் உதவி அழைப்பது, பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விளக்கப்பட்டன.
இடி மின்னல், வெள்ளம், சுனாமி குறித்து சிறப்பு விளக்கம்
இடி மின்னல் தாக்கும் சமயங்களில் மரத்தடியில் நிற்கக்கூடாது, திறந்த வெளியில் செல்போன் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும், மின்சார சாதனங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய அறிவுரைகள் வழங்கப்பட்டன.
வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் வெள்ளநீரில் நடந்து செல்லக்கூடாது, மின்கம்பிகள் அருகே செல்லக்கூடாது, அதிகாரிகள் அறிவுறுத்தும் பாதுகாப்பு முகாம்களுக்கு உடனடியாக செல்ல வேண்டும் என்பதையும் பயிற்றுநர்கள் எடுத்துரைத்தனர். சுனாமி மற்றும் நிலநடுக்கம் போன்ற பேரிடர்கள் நேரிட்டால் பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக வெளியேறுவது, உயரமான பகுதிகளை நோக்கிச் செல்லுவது, கட்டிடங்களின் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுவது போன்ற நடைமுறைகளும் விளக்கப்பட்டன.
தீவிபத்து மற்றும் முதலுதவி பயிற்சி
தீ விபத்து ஏற்பட்டால் தீயை எவ்வாறு ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்துவது, தீயணைப்பு கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது, புகை சூழ்ந்த இடங்களில் பாதுகாப்பாக வெளியேறுவது போன்ற செய்முறை பயிற்சிகள் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டன. மேலும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவர்கள் வரும் வரை வழங்க வேண்டிய அடிப்படை முதலுதவி, ரத்தக்கசிவை கட்டுப்படுத்துவது, எலும்பு முறிவு ஏற்பட்டவர்களை பாதுகாப்பாக நகர்த்துவது, மயக்கம் அடைந்தவர்களுக்கு உடனடி உதவி செய்வது உள்ளிட்ட அவசரகால முதலுதவி முறைகளும் கற்றுக்கொடுக்கப்பட்டன.
தேடுதல் மற்றும் மீட்பு பயிற்சி
பேரிடர் காலங்களில் சிக்கியவர்களை தேடும் முறை, மீட்புக் கருவிகளை பாதுகாப்பாக கையாளுதல், குழுவாக இணைந்து செயல்படுதல், தகவல் பரிமாற்றம், அவசர கால தொடர்பு அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு செயல்முறை பயிற்சிகளும் நடைபெற்றன. மாணவர்கள் ஆர்வமுடன் இதில் பங்கேற்று, பயிற்றுநர்களின் வழிகாட்டுதலின்படி மீட்பு நடவடிக்கைகளை நேரடியாக செய்து பார்த்தனர்.
சான்றிதழ் மற்றும் பேரிடர் கால உபகரணங்கள் வழங்கல்
இந்த பயிற்சியில் பங்கேற்ற என்.எஸ்.எஸ்., என்.சி.சி. மற்றும் மை பாரத் மாணவர்களுக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ்கள் மற்றும் பேரிடர் காலங்களில் பயன்படுத்தக்கூடிய அவசரகால உபகரணங்கள் வழங்கப்பட்டன. பேரிடர் நேரங்களில் தன்னார்வலர்களாக செயல்படுவதற்கான தன்னம்பிக்கையையும் இந்த பயிற்சி மாணவர்களிடம் உருவாக்கியுள்ளது.
நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை முதுநிலை வருவாய் ஆய்வாளர் வெங்கட்ராமன், கல்லூரி பேராசிரியர்கள், பயிற்றுநர்கள் மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இன்றைய காலகட்டத்தில் காலநிலை மாற்றம், கனமழை, வெள்ளப்பெருக்கு, வெப்ப அலை, புயல் போன்ற பேரிடர்கள் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற பேரிடர் மேலாண்மை பயிற்சிகள் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் அவசியமானவை. பேரிடர் நேரங்களில் பதற்றமடையாமல், சரியான முடிவுகளை எடுத்து செயல்படும் திறனை வளர்க்கும் இத்தகைய பயிற்சிகள் சமூகத்தின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
Before You Go
SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
ட்ரெண்டிங் செய்திகள்






















