மாநில அளவிலான மூத்தோர் பாரா தடகள் சாம்பியன் ஷிப் போட்டிகள் தொடக்கம்
விளையாட்டுப் போட்டிகளின் தொடக்கமாக விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பை தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் மாநில அளவிலான மூத்தோர் பாரா தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டு போட்டிகள் தொடக்க விழா நடந்தது. இதை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடக்கி வைத்தார்.
தஞ்சாவூரில் மூத்தோர் பாரா தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் இன்று மாலை தொடங்கியது. தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்கம், தஞ்சாவூர் மாவட்ட பாரா விளையாட்டு சங்கம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகிய ஆகியவை இணைந்து 21 -வது மாநில அளவிலான மூத்தோர் பாரா தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள், தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் இன்று மாலை தொடங்கியது.
வரும் 6-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த விளையாட்டுப் போட்டியில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்று விளையாட உள்ளனர். விளையாட்டுப் போட்டிகளின் தொடக்கமாக விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பை தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.

இதில் தஞ்சாவூர் மாவட்ட பாரா விளையாட்டு சங்கத்தின் தலைவர் வி.சிவக்குமார் வரவேற்றார். துணைத் தலைவர் எஸ்.கே.முத்துச்செல்வன், செயலாளர் ஜி.செந்தில், தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, கர்நாடக மாநில தடகள சங்க பொதுச் செயலாளர் ராஜவேலு, பாரா விளையாட்டு பயிற்சியாளர் ரஞ்சித்குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், மருத்துவர் சிங்காரவேலு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து நாளை முதல் சக்கர நாற்காலிகள் மூலம் 100 மீட்டர், 200, 400, 800, 1,500, 5,000 மீட்டர், ஓட்டம், ரிலே ஓட்டப் போட்டிகளும், மேலும் குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்க 38 மாவட்டங்களைச் சேர்ந்த பாரா விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டிகளில் சிறப்பிடம் பெறும் விளையாட்டு வீரர்கள் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவார்கள்























