மனைவி உயிரிழப்பு; குழந்தையை விடுதியில் விட்டுவிடு; லவ் டார்ச்சர் செய்த சிறுமியை கொன்ற இளைஞர் பகீர் வாக்குமூலம்
மயிலாடுதுறை அருகே அடையாளம் தெரியாத நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சிறுமி வழக்கில் சிசிடிவி பதிவை கொண்டு குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த நீடூர் கிராமத்தில் ரயில்வே தண்டவாளம் அருகே கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி அடையாளம் தெரியாத பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் குமாரவேல் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வு செய்து சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்தனர்.
அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் உத்தரவின் பேரில் குற்றவாளியை கண்டுபிடிக்க மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் இளையராஜா உள்ளிட்ட 7 பேர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அடையாளம் தெரியாத இளம்பெண் குறித்து அனைத்து காவல்நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் காவல்துறையினர் நீடுர் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது இறந்து கிடந்த இளம்பெண், ஆண் ஒருவருடன் செல்வது வீடியோவில் தெரியவந்தது.
அதனடிப்படையில் கேமரா பதிவில் இருந்த நீடூர் பி.எம் நகரை சேர்ந்த கூலித் தொழிலாளியான நாகராஜன் என்பவரின் மகன் 27 வயதான ஐயப்பன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்த இளம்பெண் 17 வயது சிறுமி என்பதும் கழுத்தை நெரித்து கொலை செய்ததும் தெரிய வந்தது. திருமணமான ஐய்யப்பன் மனைவி ராதிகா நோய்வாய்ப்பட்டு இறந்த நிலையில் மூன்று வயது மகனுடன் உறவினர் வீட்டில் வசித்து வந்தபோது மயிலாடுதுறை திருவிழந்தூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் பழகி வந்தது தெரிய வந்தது. 9 ம் வகுப்பு வரை படித்துவிட்டு திருப்பூரில் வேலை பார்த்து வந்த சிறுமி சமீபத்தில் ஊருக்கு வந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஐயப்பனை வற்புறுத்தியுள்ளார். தொடர்ந்து கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி இருவரும் இரவு நீடூர் ரயில்வே தண்டவாளம் அருகே சந்தித்து பேசியுள்ளனர்.
மகனை விடுதியில் சேர்த்து விட்டு தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என ஐயப்பனை வற்புறுத்தி ரயில்வே தண்டவாளத்தில் படுத்து சிறுமி மிரட்டல் விடுத்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த ஐயப்பன் சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமியை கொலை செய்த ஐய்யப்பன் மீது போக்சோ, வன்கொடுமை தடுப்புச் சட்டம், கடத்தல் மற்றும் கொலை ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

