இருப்பவர்களிடம் எடுத்து, இல்லாதவருக்கு கொடுப்போம் - அமைச்சர் சேகர் பாபு!
தமிழ்நாட்டில் கோவில் நிலங்களில் சாகுபடி செய்பவர்களின் குத்தகை பாக்கியை வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருவெண்காட்டில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவெண்காட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிகளை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று ஆய்வு செய்தார். அப்போது பள்ளிக்கான தேவைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வை முடித்துவிட்டு பெண்கள் உயர்நிலை பள்ளிக்கு செல்லும் வழியில் அமைச்சருக்கு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயில் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
அதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர் கோபுர தரிசனம் செய்துவிட்டு பெண்கள் உயர்நிலைப் பள்ளியை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் உயர்நிலைப்பள்ளி கட்டிடங்கள், கழிப்பறைகள் பழுது நீக்கம் செய்ய 1 கோடியே 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனைக்கொண்டு ஒரு மாதத்திற்குள் பழுதடைந்த கட்டிடங்கள் மற்றும் கழிப்பறைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தை மீட்டெடுக்கவும், வாடகை வசூல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களின் நிலைமையை அறிந்து நிலத்தை மீட்க முயற்சி எடுக்கப்படும். இருப்பவர்களிடம் எடுத்து, இல்லாதவருக்கு கொடுப்போம் என்ற தாரக மந்திரத்துடன் செயல்பட்டு வருகிறோம். கோயில் நிலங்களில் விவசாயம் செய்பவர்கள் குத்தகை சாகுபடி பாக்கி வைத்திருப்பது குறித்து கண்டறிந்து, குத்தகை பாக்கி வசூல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கோவில் சொத்துக்கள் குறித்த விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. கோயில் அறங்காவலர் தலைவர் பதவி ஆன்மீக பணியில் ஈடுபடுபவர்களை நியமனம் செய்வோம். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் பணிக்கு 207 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களில் தகுதி உடையவர்களுக்கு பணி வழங்கப்படும்.

3 கமிட்டிகள் ஒப்புதல் தந்த பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடியும். இதனால் காலதாமதம் ஏற்படுகிறது. இதனை விரைவுபடுத்த நடவடிக்கை எடுத்து விரைவில் அனுமதி பெற்று கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த முயற்சி செய்யப்படும். கொரோனா நிவாரண நிதி அனைத்து கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, இணை ஆணையர் அசோக்குமார் உதவி ஆணையர் இளையராஜா, எம்.எல்.ஏ-க்கள் பூம்புகார் நிவேதா முருகன், சீர்காழி பன்னீர்செல்வம் மயிலாடுதுறை ராஜகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Before You Go
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்






















