இனி இதுதான் ஒரிஜினல்... புவிசார் குறியீடு பெற்ற மணப்பாறை முறுக்குக்கு தனி லோகோ
மணப்பாறை முறுக்கு திருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக புவிசார் குறியீடு பெற்ற பொருளாகும். இதற்காக 2014-ம் ஆண்டு விண்ணப்பிக்கப்பட்டு 2023ல் புவிசார் குறியீடு பெறப்பட்டது.

தஞ்சாவூர்: பிரபலமான நொறுக்குத் தீனியான மணப்பாறை முறுக்குக்கு புவிசார் குறியீடு கிடைத்ததை அடுத்து அதற்கான தனி லோகோ வெளியிடும் நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடந்தது.
தஞ்சாவூர் சுலோச்சனா - பன்னீர்செல்வம் அறிவுசார் சொத்துரிமை விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு மையம் சார்பில், மணப்பாறை முறுக்குக்கு புவிசார் குறியீடு பெற்று கொடுக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்ட நிகழ்வாக மணப்பாறை முறுக்கிற்கு என்று தனி லோகோவெளியிடும் நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் ப.சஞ்சய்காந்தி மணப்பாறை முறுக்கு பாக்கெட்டில் அச்சிடப்பட்ட லோகோவை வெளியிட, மணப்பாறை முறுக்கு தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் சேகர் பெற்றுக் கொண்டார்.

மணப்பாறை முறுக்கு திருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக புவிசார் குறியீடு பெற்ற பொருளாகும். இதற்காக 2014-ம் ஆண்டு விண்ணப்பிக்கப்பட்டு 2023ல் புவிசார் குறியீடு பெறப்பட்டது. தற்போது அதற்கான தனி லோகோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி மணப்பாறை முறுக்கு பொட்டலங்களில் இந்த லோகோ ஸ்டிக்கர் மூலம் ஒட்டப்படுவதால், பொதுமக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். இதனால் மணப்பாறை முறுக்குக்கு பாரம்பரிய தயாரிப்பாளருக்கு விற்பனை அதிகரிக்கும், உரிய விலை கிடைக்கும். இந்த பெயரையோ, முத்திரையையோ யாரேனும் தவறாக பயன்படுத்தினால் அவர்கள் மீது சட்டப்படி குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவில் இதுவரை 692 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 69 பொருட்களில் 55 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சிக்கு பின்னர் சென்னை உயர்நீதிமன்ற அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் ப.சஞ்சய்காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:
திருச்சி மாவட்டம், மணப்பாறை முறுக்கு தனிச் சிறப்பான சுவையுடைய, அனைவராலும் விரும்பப்படும் நொறுக்குத் தீனி. பரம்பரை குடிசைத் தொழிலாக வளர்ந்துள்ள இந்த மணப்பாறை முறுக்கை சட்ட ரீதியாக பாதுகாப்பதற்காக, சுலோச்சனா - பன்னீர்செல்வம் அறிவுசார் சொத்துரிமை விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு மையம் ஆய்வு செய்தது. இதனுடைய தனித்துவம், தனி வரலாறு, சிறப்பு, தயாரிக்கும் முறை, விற்பனை முறை ஆகியவற்றுடன் புவிசார் குறியீடு பெறுவதற்காக 2014 ஆம் ஆண்டில் விண்ணப்பிக்கப்பட்டு 2023ம் ஆண்டில் மணப்பாறை முறுக்குக்கு புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டது. தற்போது இதற்கான தனி லோகோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் முழுப் பயனையும் பாரம்பரிய முறுக்கு தயாரிப்பாளர்கள் பெறும் வகையில், இந்தத் தனி லோகோ வெளியிடப்பட்டுள்ளது. விற்பனை செய்யப்படும் அனைத்து மணப்பாறை முறுக்கு பாக்கெட்டுகளிலும் இந்தத் தனி லோகோ இடுவதன் மூலம் போலிகள் நுழைவதைத் தடுக்க முடியும். இதனால், நுகர்வோர்களும் சரியான நபரிடம் தரமான பொருளைக் கண்டறிந்து வாங்குவர். இதன் மூலம் உண்மையான பாரம்பரிய தயாரிப்பாளருக்கு விற்பனை அதிகரித்து, உரிய அங்கீகாரம் கிடைக்கும். இந்தப் பெயரையோ, லோகோவையோ வேறு யாரேனும் தவறாக பயன்படுத்தினால், அவர்கள் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், சீரக சம்பா, தஞ்சாவூர் கண்ணாடி கலைப்பொருட்கள் (கட் கிளாஸ் வொர்க்), திருவாவடுதுறை சீவாலி, சிவகாசி பட்டாசு, சிவகாசி தீப்பெட்டி ஆகிய 5 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளதால், அவற்றுக்கும் விரைவில் கிடைத்துவிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.






















