“தஞ்சையை தூய்மையான மாநகரமாக மாற்றுவோம்”... இணைந்து செயல்பட மேயர் பொறுப்பு அஞ்சுகம் பூபதி அறிவுறுத்தல்
குப்பைகளை சரியான முறையில் பிரித்து வழங்குவது முதல், பொதுவிடங்களில் குப்பைகளை கொட்டாமல் இருப்பது வரை ஒவ்வொரு குடிமகனின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சியை தூய்மையான, சுகாதாரமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாநகரமாக மாற்றுவதற்கு மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த முயற்சி முழுமையான வெற்றி பெற மாநகராட்சி ஊழியர்கள், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய மூவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று மாநகராட்சி பொறுப்பு மேயர் அஞ்சுகம் பூபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். குப்பைகளை சரியான முறையில் பிரித்து வழங்குவது முதல், பொதுவிடங்களில் குப்பைகளை கொட்டாமல் இருப்பது வரை ஒவ்வொரு குடிமகனின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மூன்று வகையாகக் குப்பைகளைப் பிரித்து வழங்க வேண்டும்
வீடுகளில் தினசரி உருவாகும் குப்பைகளை பொதுமக்கள் கட்டாயம் மூன்று வகைகளாகப் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, பிளாஸ்டிக் மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகள் – தனியாக.
காய்கறி கழிவுகள், உணவுக் கழிவுகள், டீத்தூள் உள்ளிட்ட மக்கும் கழிவுகள் – தனியாக.
சானிட்டரி நாப்கின், டயப்பர் மற்றும் மருத்துவக் கழிவுகள் – தனியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கினால் அவற்றை அறிவியல் முறையில் மறுசுழற்சி செய்து சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிளாஸ்டிக் கழிவுகள் தொழிற்சாலைக்கு... மக்கும் கழிவுகள் உரமாக
பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் தனியார் மறுசுழற்சி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு, பின்னர் அரியலூர் சிமெண்ட் ஆலை உள்ளிட்ட தொழிற்சாலைகளில் மாற்றுப் பயன்பாட்டிற்கு கொண்டு செல்லப்படுகின்றன. அதேபோல் காய்கறி மற்றும் உணவுக் கழிவுகள் மாநகராட்சியின் மறுசுழற்சி மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு இயற்கை உரமாக மாற்றப்படுகின்றன. மேலும், இலைகள், வாழை மரக்கழிவுகள் உள்ளிட்ட இயற்கை கழிவுகளும் தனியாக சேகரிக்கப்பட்டு உலர்த்தப்பட்டு உரமாக தயாரிக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கைகள் மூலம் குப்பைகளை வளமாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வணிகர்களுக்கும் முக்கிய அறிவுறுத்தல்
தஞ்சாவூர் மாநகரில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு வெளியே மக்கும் மற்றும் மக்காத கழிவுகளை தனித்தனியாக சேகரித்து வைக்க வேண்டும் என்றும் மேயர் கேட்டுக் கொண்டுள்ளார். இரவு 8 மணி முதல் 12 மணி வரை மாநகராட்சி வாகனங்கள் இந்தக் கழிவுகளை நேரடியாக சேகரித்து செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிகர்கள் இந்த நடைமுறையை முறையாக பின்பற்றினால் நகரில் சாலையோர குப்பைகள் குறைவதுடன், சுகாதாரமும் மேம்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
மேயர், ஆணையர் நேரடி கண்காணிப்பு
தூய்மை பணிகள் சிறப்பாக நடைபெறுகிறதா என்பதை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் மாநகராட்சி ஆணையர் நேரடியாக கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன், மண்டலக் குழுத் தலைவர்கள் மற்றும் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களும் தங்கள் பகுதிகளில் தூய்மை பணிகளை தொடர்ந்து கண்காணித்து, குறைகள் இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
263 இடங்களில் தீவிர தூய்மை நடவடிக்கை
தஞ்சாவூர் மாநகரில் தற்போது பொதுமக்கள் அதிகமாக குப்பைகள் கொட்டும் 127 பகுதிகளும், மாநகராட்சியின் 136 குப்பைத் தொட்டிகளும் என மொத்தம் 263 இடங்களில் தூய்மை பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த இடங்களில் மாநகராட்சி பணியாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொண்டு, குப்பைகள் தேங்காமல் பார்த்துக் கொள்ள உள்ளனர்.
பொதுமக்களின் ஒத்துழைப்பே வெற்றிக்கு அடிப்படை
நகரை சுத்தமாக வைத்திருப்பது மாநகராட்சி நிர்வாகத்தின் பொறுப்பு மட்டுமல்ல; ஒவ்வொரு குடிமகனின் சமூகப் பொறுப்பும் கூட ஆகும். பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல் மற்றும் தூய்மையை பேணுதல் ஆகியவற்றில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.
தூய்மையான நகரம் என்பது ஆரோக்கியமான சமூகத்தின் அடையாளம் என்பதால், தஞ்சாவூரை மாநிலத்தின் முன்னணி தூய்மை மாநகரமாக மாற்ற பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதே மாநகராட்சி நிர்வாகத்தின் எதிர்பார்ப்பாகும்.
Before You Go
Cauvery Issue : "நாங்களே வறட்சியில் இருக்கோம்! ஹெலிகாப்டர்ல வந்து பாருங்க" விஜய்க்கு DKS அழைப்பு!
ட்ரெண்டிங் செய்திகள்






















