எனக்கு சிறப்பான அடித்தளம்: ஆரம்பகால பள்ளியை பெருமைப்படுத்திய இந்திய கடற்படை தளபதி
ஆரம்பக் கல்வி தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அடிப்படையாக அமைகிறது. அதே போல எனக்கும் இந்த பள்ளியில் சிறப்பான அடித்தளம் கிடைத்தது

தஞ்சாவூர்: ஆரம்பக் கல்வி தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அடிப்படையாக அமைகிறது. அதே போல எனக்கும் இந்த பள்ளியில் சிறப்பான அடித்தளம் கிடைத்தது என்று தஞ்சையில் தான் படித்த பள்ளிக்கு வந்த இந்திய கடற்படைத் தளபதி ஹரிகுமார் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
இந்திய கடற்படை தளபதி ஹரிகுமார்
இந்திய கடற்படை தளபதி ஹரிகுமார். கேரளாவில் பிறந்தவர். இவரது தந்தை தஞ்சாவூரில் மத்திய அரசின் உர தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றியதால், தஞ்சாவூரில் உள்ள தூய இருதய நர்சரி பள்ளியில் கடந்த 1966 முதல் 1972ம் ஆண்டு வரை எல்கேஜி முதல் 5 ஆம் வகுப்பு படித்துள்ளார்.
இந்நிலையில் இன்று தஞ்சாவூருக்கு வந்த ஹரிகுமார் தான் படித்த பள்ளிக்கு வருகை தந்தார். அவரை பேண்டு வாத்தியங்கள் முழங்க பள்ளி நிர்வாகத்தினர் ஆசிரியர்கள், மாணவர்கள் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி வளர்ச்சிக்காக ரூ.5 லட்சம் காசோலையை ஹரிகுமார் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:

பழைய நினைவுகளை எண்ணி பார்க்கும் போது மகிழ்ச்சி
இங்கு படித்த பழைய நினைவுகளை எண்ணிப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இப்போதுள்ள சீருடைக்கும், அப்போது நாங்கள் அணிந்த சீருடைக்கும் அதிக மாற்றங்கள் இருக்கிறது. இந்த பள்ளியில் படித்ததால் தான் சிறந்த அடித்தளத்தை பெற முடிந்தது. ஆரம்பக் கல்வி தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அடிப்படையாக அமைகிறது. அதே போல எனக்கும் இந்த பள்ளியில் சிறப்பான அடித்தளம் கிடைத்தது.
இப்பள்ளியில் ஆங்கில மொழி அறிவு எனக்கு அதிகம் கிடைத்தது. அதே போல் கடினமான ஆங்கிலச் சொற்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என இங்கிருந்த ஆசிரியர்கள் பயிற்றுவித்தனர். எப்போதும் அவர்களை மறக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மரக்கன்றுகள் நட்டார்
பின்னர் பள்ளியில் மரக்கன்று நட்டும், தான் பயின்ற வகுப்பறைக்கு சென்று இருக்கையில் அமர்ந்தும், தன்னுடன் படித்த வகுப்புத் தோழர்களை பார்த்து அவர்களிடம் நலம் விசாரித்தும், பள்ளியில் படிக்கும்போது எடுக்கப்பட்ட குழு புகைப்படங்கள், நாடகங்களில் நடித்த புகைப்படங்களை பார்த்து வியந்து, தன் மனைவி கலாவிடம் எடுத்துக் கூறினார்.
முன்னதாக பள்ளிக்கு வந்த ஹரிகுமார் பள்ளியின் தலைமையாசிரியை ரோஸ் டாப்னி வரவேற்றார். இறுதியாக மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது, இதை பார்த்து மாணவர்களை ஹரிகுமார் பாராட்டினார்.
Before You Go
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
ட்ரெண்டிங் செய்திகள்






















