விவசாயத் தொழிலாளர்கள் ஹேப்பி அண்ணாச்சி... தொடர்ந்து கிடைக்கும் விவசாயப்பணிகள்
சம்பா, தாளடி பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால் விவசாயத் தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை பெய்தாலும் நாற்று நடுதல், உரம் தெளித்தல், களைப்பறிப்பு என்று தொடர்ந்து பணிகள் நடந்து வருகிறது

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பெய்த கனமழை நன்கு வளர்ந்த சம்பா, தாளடி பயிர்களின் வளர்ச்சிக்கு உதவும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதனால் ஆலக்குடி, கல்விராயன்பேட்டை பகுதியில் விவசாயிகள் நாற்று நடும் பணி மற்றும் உரம் தெளிக்கும் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். தொடர்ந்து விவசாயப்பணிகள் கிடைத்து வருவதால் பெண் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் தஞ்சை திருவாரூர் நாகை மயிலாடுதுறை கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து வந்தது. பல பகுதிகளில் கனமழை பெய்தது.
தஞ்சை மாவட்டம் ஆலக்குடி, சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, திருவையாறு, பாபநாசம் அம்மாபேட்டை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதில் ஆலக்குடி, வல்லம், சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, கள்ளப்பெரம்பூர், ராயந்தூர் உட்பட பல பகுதிகளில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பல பகுதிகளில் விவசாயிகள் நாற்று விட்டுள்ளனர். சில விவசாயிகள் பாய் நாற்றங்கால், நாற்று பறித்து நடுதல் உட்பட பல பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிலர் 40 நாட்கள் கடந்த நாற்றுகள் நன்கு வளர்ந்து வருவதால் உரம் தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து பெய்த மழை இந்த பயிர்களுக்கு நன்கு உதவும் என்று விவசாயிகள் தரப்பில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஒரு சில பகுதிகளில் தற்போதுதான் நாற்றுகள் நட்டுள்ளனர். இந்த இளம் நாற்றுகள் தொடர்ந்து மழை பெய்தால் வயலில் தண்ணீர் தேங்கி அழுகிவிடும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.
சம்பா, தாளடி பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால் விவசாயத் தொழிலாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை பெய்தாலும் நாற்று நடுதல், உரம் தெளித்தல், களைப்பறிப்பு என்று தொடர்ந்து பணிகள் நடந்து வருவதால் பெண் விவசாயத் தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆலக்குடி உட்பட சில பகுதிகளில் முன்கூட்டியே நாற்று நட்ட விவசாயிகள் தற்போது வயல்களில் களை பறித்தல் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக விட்டு விட்டு பெய்யும் மழையால் சம்பா, தாளடி பயிர்கள் நன்கு வளர்ந்து வருகிறது. மேலும் மாவட்டம் முழுவதும் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதும் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறுவை சாகுபடி எவ்வாறு இலக்கை மிஞ்சி நடந்ததோ அதேபோல் தற்போது 3.40 லட்சம் ஏக்கரை விட சம்பா, தாளடி மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் தற்போது 2.75 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் நடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் மகிழ்ச்சி என்றால் மறுபுறம் அம்மாப்பேட்டை, பல்லவராயன்பேட்டை, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு உட்பட பல பகுதிகளில் இளம் நாற்றுகள் வாய்க்கால்கள் தூர்வாராததால் வெள்ளநீர் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி சோகத்தை உண்டாக்கி உள்ளது.





















