ட்ரோன்கள் பறக்கக் கூடாது... தஞ்சாவூர் கலெக்டர் தடை அறிவிப்பு எதற்காக?
தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க விடும் நபர்கள் மீது உரிய விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தஞ்சாவூர்: தஞ்சாவூருக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தரவுள்ளதை ஒட்டி, மாவட்டத்தில் வரும் 28 ஆம் தேதி முதல் மார்ச் 2 ஆம் தேதி வரை டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வரும் 28ம் தேதி வருகிறார். பின்னர், மார்ச் 1 ம் தேதி ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரிக்கு சென்று, அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதையடுத்து அன்று மதியம் ஹெலிகாப்டரில் புறப்பட்டு தஞ்சாவூர் விமானப்படை தளத்துக்கு வருகிறார்.
அங்கிருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு சென்று தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பிரதமர் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு வருகை தரவுள்ளதையொட்டி, பாதுகாப்பு காரணம் கருதி மாவட்டத்தில் வரும் 28ம் தேதி பிற்பகல் முதல் மார்ச் மாதம் 2 ஆம் தேதி முற்பகல் வரை ஆளில்லா விமானங்கள் மற்றும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. இத்தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க விடும் நபர்கள் மீது உரிய விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.























