இறந்தும் இருவருக்கு உதவிய மாமனிதன்... சோகத்திலும் ஒப்புதல் கொடுத்த குடும்பம்
குருமாணிக்கத்தின் குடும்பத்தினர் ஒப்புதலுடன் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. அவரது கண் தஞ்சை அரசு ராஜா மிராசுதாரர் மருத்துவமனைக்கும், தோல் மதுரை தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டது.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் விபத்தில் மூளைச் சாவு அடைந்த சிறப்பு எஸ்ஐ உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. அவரது கண்கள் மற்றும் தோல் ஆகியவை தானமாக பெறப்பட்டது. தொடர்ந்து அவரது உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
தஞ்சை மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வந்தவர் குரு மாணிக்கம் (50). இவரது மனைவி வித்யா. இவர்களுக்கு இரண்டு மகன்கள். இந்நிலையில் கடந்த 3ம் தேதி தனது மகனை கல்லூரிக்கு பஸ்ஸில் ஏற்றிவிட்ட பின்னர் பைக்கில் குரு மாணிக்கம் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார்.
அப்போது யாகப்பா நகர் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி குரு மாணிக்கம் படுகாயம் அடைந்தார். உடன் அவரை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் குரு மாணிக்கம் நேற்று மூளைச் சாவு அடைந்தார். இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் குருமாணிக்கத்தின் குடும்பத்தினர் ஒப்புதலுடன் அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. இதை எடுத்து அவரது கண் தஞ்சை அரசு ராஜா மிராசுதாரர் மருத்துவமனைக்கும், தோல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. பின்பு மூளைச்சாவு அடைந்த சிறப்பு எஸ்ஐ குருமாணிக்கத்திற்கு அரசு மரியாதை செய்யப்பட்டது. இதில் தஞ்சை மருத்துவக் கல்லூரி டீல் பொறுப்பு பாலசுப்ரமணியன், ஆர். எம். ஓ செல்வம், மருத்துவர்கள் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, உலக உறுப்பு தான தினம் மற்றும் தேசிய உறுப்பு தான தினம் ஆகியவை கொண்டாடப்படுகின்றன. உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஆகஸ்ட் 13 ம் தேதி உலக உறுப்பு தான தினம் கொண்டாடப்படுகிறது.
உறுப்பு தானம் பற்றிய தவறான கருத்துக்களை மக்களுக்கு உணர்த்தவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
தேசிய உறுப்பு தான தினம். இந்தியாவில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி தேசிய உடல் உறுப்பு தான தினம் கொண்டாடப்படுகிறது. உறுப்பு தானத்தின் உயிர்காக்கும் திறன் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

