தஞ்சையில் அதிர்ச்சி! பாஜக-விற்கு தொகுதி ஒதுக்கியதால் கொந்தளித்த அதிமுக மாநகர செயலாளரின் ஆதரவாளர்கள்
தஞ்சாவூர் மாநகர கழக செயலாளருமான என்.எஸ். சரவணன் தேர்தல் களத்தில் தீவிரமாக இறங்கி பணியாற்ற தொடங்கினார்.

தஞ்சாவூர்: தஞ்சை தொகுதியை தலைமை கூட்டணி கட்சிக்கு தாரை வார்த்து கொடுத்ததால் அதிமுக மாநகரச் செயலாளர் என்.எஸ்.சரவணன் கடும் அதிருப்தி அடைந்துள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த தஞ்சை ரயிலடி பகுதியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளரும் மாநகர கழக செயலாளருமான என்.எஸ். சரவணன் தேர்தல் களத்தில் தீவிரமாக இறங்கி பணியாற்ற தொடங்கினார். தனது ஆதரவாளர்களுடன் தஞ்சை தொகுதியின் பல்வேறு இடங்களில் தனது கரங்களை வலுப்படுத்திக் கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

எப்படியும் தலைமை தஞ்சை தொகுதியை தனக்கு ஒதுக்கீடு செய்து விடும் என்று அழுத்தமான நம்பிக்கையில் இருந்தவருக்கு அடிவயிற்றில் கொள்ளிக்கட்டையை செருகியது போல் எடப்பாடி பழனிசாமி தஞ்சை தொகுதியை கூட்டணி கட்சியான பாஜகவிற்கு ஒதுக்கீடு செய்துள்ளார். கட்சியை வளர்க்க அரும்பாடு பட்ட தனக்கு தலைமை கொடுத்த அதிர்ச்சி அட்டாக்கால் நிலை குலைந்து போய் உள்ளார் சரவணன் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
ஆர்ப்பாட்டமாக இருக்கட்டும், பெருந்திரள் போராட்டமாக இருக்கட்டும் அனைத்திலும் முனைப்பு காட்டி தலைமையிடம் நற்பெயர் பெற்றவருக்கு இப்போது செம அல்வா கொடுக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையால் தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி பாஜகக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு கட்சியில் உள்ள அடிமட்ட தொண்டர்களுக்கும் அதிருப்தி என்பதுதான் உண்மை நிலை.
தஞ்சை தொகுதியில் நீண்ட காலமாக கட்சி வளர்ச்சிக்காக எவ்வித பயனையும் எதிர்பார்க்காமல் உழைத்து வந்ததற்கு தலைமை கொடுத்த பரிசாஇது என்று மாநகர செயலாளர் சரவணன் அதிர்ந்து போய்தான் உள்ளாராம்.
கூட்டணி அரசியல் காரணங்களுக்காக எடுக்கப்பட்ட இந்த தீர்மானம், அடிப்படை நிலை தொண்டர்களின் நம்பிக்கையை பாதிக்கும். இதனால் தேர்தல் பணிகளில் சுணக்கம் ஏற்படும் வாய்ப்பும் இருப்பதாக அதிமுக நிர்வாகிகள் மத்தியிலேயே பரபரப்பான பேச்சு எழுந்துள்ளது. கூட்டணி வலுவை அதிகரிக்கும் நோக்கில் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தலைமை தரப்பில் கூறினாலும் தஞ்சை மாவட்டத்தில் எழுந்துள்ள இந்த அதிருப்தி நிலைமை தேர்தல் சூழலில் தாக்கம் செலுத்தும் என்றும் கூறப்படுகிறது.
ஏமாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்ட அதிமுக மாநகர செயலாளர் என்.எஸ்.சரவணன் பற்றி தெரியுங்களா? படிப்பு: பி.காம், பி.எல். அகமுடையார். கட்சி தலைமையான எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளர். 2001 ஆம் ஆண்டு கட்சி உறுப்பினர், 2003 51 வது வட்ட துணைச் செயலாளர், 2007 வட்டப்பிரதிநிதி 51 வது வட்டம், 2011 மாமன்ற உறுப்பினர், 2012 நகர இளைஞரணி செயலாளர், 2013 நிக்கல்சன் கூட்டுறவு வங்கி பொருளாளர், 2014 மருத்துவக் கல்லூரி பகுதி கழக செயலாளர், 2017 துணைத் தலைவர் நிக்கல்சன் கூட்டுறவு நகர வங்கி, 2021 நிக்கல்சன் கூட்டுறவு நகர வங்கி தலைவர், 2023 முதல் மாநகர செயலாளர் பதவி வகித்து வருகிறார்.
இப்படி ஏறுமுகம் காட்டி தஞ்சை சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக தலைமை அறிவித்து விடும் என்ற நம்பிக்கையில் உலா வந்தவருக்கு இந்த அறிவிப்பு அதளபாதாளத்தில் தள்ளியது போல் அமைந்து விட்டதாம். தஞ்சை தொகுதி கூட்டணி கட்சியான பாஜகவுக்கு கொடுத்த தகவல் அறிந்த மாநகர செயலாளர் சரவணனின் ஆதரவாளர்களுக்கு ஷாக். உடன் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த தஞ்சாவூர் ரயிலடி பகுதியில் குவிந்தனர். சிறிது நேரம் அந்த பகுதியே பரபரப்புடன் காணப்பட்டது. பின்னர் அவர்களுக்குள் கூடி பேசி ஒவ்வொருவராக கலைய ஆரம்பித்தனர். ஆர்ப்பாட்டம் என்று குவிந்தவர்களுக்கு ஏதோ தகவல் வர அங்கிருந்து நழுவிச் சென்று விட்டனர்.























