கிடங்குகள் நோக்கி நகர்ந்த 27 லட்சம் சாக்குகள்… தஞ்சையில் லாரிகள் பரபரப்பாக இயங்கிய தருணம்!
கொல்கத்தாவில் இருந்து சரக்கு ரயிலின் 42 வேகன்களில் 5460 பேரல் சாக்குகள் தஞ்சைக்கு வந்தது. ஒரு பேரல் என்பது 500 சாக்குகள் ஆகும். அதன்படி 27,30,000 சாக்குகள் தஞ்சை வந்தது.

தஞ்சாவூர்: கொல்கத்தாவிலிருந்து தஞ்சைக்கு சரக்கு ரெயிலில் வந்த 27.30 லட்சம் சாக்குகள் வந்து சேர்ந்தன. இவை அனைத்தும் நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்குகளுக்கு லாரிகள் அனுப்பி வைக்கப்பட்டது. குறுவை சாகுபடிக்காக முன்னேற்பாடு பணிகளில் வேளாண்துறை வெகுவாக மும்முரம் காட்டி வருகிறது.
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோடைகால சாகுபடியும் நடைபெறும். ஒரு சில பகுதிகளில் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. நெல் அறுவடை முடிந்த பின்னர் உளுந்து, பயறு போன்றவற்றையும் விவசாயிகள் சாகுபடி செய்வது வழக்கம்.
பம்ப் செட் வசதியுள்ள சில பகுதிகளில் விவசாயிகள் கோடை நெல் சாகுபடியும் மேற்கொள்வர். குறுவை, சம்பா, தாளடி என்று முப்போகமும், கோடை நெல்லும்தான் தஞ்சையின் முக்கிய சாகுபடி பயிராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல் சாகுபடியைதான் விவசாயிகள் மேற்கொள்கின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் பம்ப்செட் மூலம் கோடை நெல் சாகுபடியை மேற்கொண்டுள்ளனர். வரும் ஜூன் மாதம் மேட்டூர் அணை வழக்கம் போல் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் குறுவை சாகுபடிக்கான பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். தற்போது தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக பெய்த மழை விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கோடை நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் அறுவடை பணிகளும் தொடங்கியுள்ளன. இந்நிலையில் அறுவடை செய்யப்படும் நெல்லுக்கு சாக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சாக்குகள் வரவழைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கொல்கத்தாவில் இருந்து சரக்கு ரயிலின் 42 வேகன்களில் 5460 பேரல் சாக்குகள் தஞ்சைக்கு வந்தது. ஒரு பேரல் என்பது 500 சாக்குகள் ஆகும். அதன்படி 27,30,000 சாக்குகள் தஞ்சை வந்தது. இதையடுத்து ஏராளமான தொழிலாளர்கள் சரக்கு ரெயிலில் இருந்து சாக்குகளை லாரிகளில் ஏற்றினர்.
இந்த சாக்குகள் தஞ்சை மாவட்டம் அனைத்து தாலுகாவிலும் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்





















