ஈகோவை கைவிடுங்க.. யாரோட கூட்டணி சேர்ந்தாலும் வேலை பாருங்க.. விஜய பிரபாகரன் அட்வைஸ்!
நல்லாட்சி வர வேண்டும் என நினைக்கிறீர்கள். ஒரு மாற்றம் வர வேண்டும். விஜயகாந்த் ஆட்சி வருவதற்கு பிரேமலதா நிச்சயம் நல்லதாக ஒரு முடிவு எடுப்பார் என விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.

2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் ஒன்றுப்பட்டு செயல்பட வேண்டும் என தேமுதிக தொண்டர்களுக்கு அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.
தேமுதிக யாருடன் கூட்டணி?
2026ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இன்னும் இரண்டு மாத காலம் மட்டுமே உள்ளதாக தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் ஆகிய 4 முனை போட்டி நிலவுகிறது. இதில் பெரும்பாலான கட்சிகள் கூட்டணியை உறுதி செய்த நிலையில் தேமுதிக மட்டும் இன்னும் கூட்டணியை உறுதி செய்யவில்லை. அக்கட்சி யாருடன் கூட்டணி இணையப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
விஜய பிரபாகரன் அறிவுரை
இந்த நிலையில் ஆலங்குளத்தில் பேசிய விஜய பிரபாகரன், “கேப்டன் ஊழல் செஞ்சதா கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?. அப்படி யாராவது சொல்ல முடியுமா?. தேமுதிகவில் யாராவது தப்பு பண்றாங்கன்னு சொல்ல முடியுமா?. விஜயகாந்த் நல்லவர், தேமுதிக நல்லவங்க என சொல்லும் நீங்கள் ஏன் ஜெயிக்க மட்டும் வைக்க மாட்டேங்குறீங்க?. உங்களுக்காக வீதி வீதியா, ரோடு ரோடா வருகிறோம். மக்களுக்காக எவ்வளவோ உழைக்கிறோம். எவ்வளவோ செய்தும் ஏன் மக்கள் நீங்கள் சிந்திப்பதில்லை?. தேர்தல் நேரத்தில் காசு கொடுப்பதால் மாறி விடுகிறீர்களா?. நல்லாட்சி வர வேண்டும் என நினைக்கிறீர்கள். ஒரு மாற்றம் வர வேண்டும். விஜயகாந்த் ஆட்சி வருவதற்கு பிரேமலதா நிச்சயம் நல்லதாக ஒரு முடிவு எடுப்பார்.
2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் ஒன்றுப்பட்டு செயல்பட வேண்டும். தேர்தலுக்கு முன்பு எத்தனை எம்.எல்.ஏ. சீட் இருக்கிறது என்பது முக்கியமில்லை. தேர்தலுக்குப் பின் எத்தனை எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள் என்பது தான் அடுத்த 5 ஆண்டுகள் பேசும். சத்ரியனாக இருப்பதை விட சாணக்கியனாக இருக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் தேமுதிக தொண்டர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்.
தயவு செய்து ஈகோ, நீ பெரியவன், நான் பெரியவன் என்ற எண்ணத்தை கைவிடுங்கள். 2005ம் ஆண்டு விஜயகாந்துக்காக வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு அன்றைக்கு மதுரை மாநாட்டு வந்தீர்கள். 2026 தேர்தலில் அதேபோல் வேலைப் பார்த்து நம்முடைய வாக்குகளை மீட்டெடுக்க வேண்டும். நாம் யார் என நிரூபிக்க வேண்டிய தேர்தல் இதுவாகும். எத்தனை சீட்டுகள் வாங்கினாலும் நாம் 100% ஜெயிக்க வேண்டும். உங்களுடன் சேர்ந்து இரவு, பகல் பாராமல் வேலை பார்க்க நான் தயாராக இருக்கிறேன்.
நான் எம்.எல்.ஏ., எம்.பி.,யாக வேண்டும் என நினைக்கவில்லை. என்னுடைய அப்பாவுக்காக உழைத்த நீங்கள் ஜெயிக்க வேண்டும் என நினைக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.























