TVK Vijay: 'அண்ணா ஆட்சியமைக்க ஆதரவு கொடுங்க கேட்ட விஜய்' - திருமாவளவன் சொன்ன பதில் என்ன?
தவெக ஆட்சியமைக்க திருமாவளவனிடம் ஆதரவு கோரினார் விஜய்?

தவெக ஆட்சியமைக்க ஆளுநர் அனுமதி கொடுக்காத நிலையில், விஜய் திருமாவளவனிடம் ஆதரவு தரும்படி கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தவெக 108 இடங்களை பிடித்து வெற்றி பெற்றது. இருப்பினும், ஆட்சியமைக்க 118 இடங்கள் தேவை என்பதால் தங்களுக்கு ஆதரவு தரக்கோரி காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தவெக அழைப்பு விடுத்தது. இதில், காங்கிரஸ் ஆதரவு கொடுத்ததால் அவர்களின் 5 சீட்டுகளை சேர்ந்து 112 இடங்கள் கிடைத்துள்ளது (திருச்சி கிழக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டாம்). ஆனால், இரண்டு கட்சிகள் இன்னும் தங்களின் முடிவுகளை தெரிவிக்கவில்லை.
திருமாவளவனிடம் ஆதரவு கேட்ட விஜய்
இந்த நிலையில், விசிக தலைவர் திருமாவளவனை தவெக தலைவர் விஜய் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு அளிக்கும்படி திருமாவளவனிடம் விஜய் கேட்டுக்கொண்டதாகவும், ஆலோசித்து முடிவெடுப்பதாக திருமாவளவன் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
திமுக - அதிமுக தவெகவை தடுக்கின்றனர்
ஒரு பக்கம் விஜய் திருமாவளவனிடம் ஆதரவு கோரிய நிலையில், தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீனை சந்தித்து தங்களுக்கு ஆதரவு கொடுக்குப்படி கோரினார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ள தவெகவை ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்க வேண்டும். அரசியல் சதிகளை முறியடித்தே தவெக தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்திருக்கிறது; நிச்சயம் ஆட்சியமைப்போம். ஆளுநர் எங்களை அழைக்க வேண்டும். யாரால் தாமதம் செய்யப்படுகிறது என்பது குறித்து விரைவில் கூறுவோம். பெரும்பான்மையை சட்டமன்றத்தில்தான் நிரூபிக்க வேண்டும். ஆளுநர் சட்டப்படி அழைக்க வேண்டும். திமுகவும் அதிமுகவும் கூட்டணி சேர்ந்து தவெகவை ஆட்சியமைக்க விடாமல் செய்து வருகின்றனர்” என்று குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
தவெகவுக்கு பெரும்பான்மை இல்லை
இரண்டாவது நாளாக இன்றும் தவெக தலைவர் விஜய் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்தார். அப்போது பெரும்பான்மையை 112 எம்.எல்.ஏ.,க்களை வைத்து எப்படி நிரூபிப்பீர்கள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை ஆளுநர் எழுப்பியதாகவும், அதற்கு விஜய் விளக்கம் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் வரை நிகழ்ந்தது. இதனைத் தொடர்ந்து விஜய் ஆளுநர் மாளிகையில் இருந்து பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.
அதன்பிறகு, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இல்லையென தவெக தலைவர் விஜய்யிடம் இன்று ஆளுநர் எடுத்துரைத்தார். இதனையடுத்து ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் பெரும்பான்மை எம்எல்ஏக்கள் தேவை என்பதையும் ஆளுநர் அப்போது விஜய்யிடம் தெளிவுப்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Before You Go
Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
ட்ரெண்டிங் செய்திகள்






















