Vanni Arasu: சாதிய பாகுபாட்டை எதிர்கொண்டவர்.. ஈழப் போரை நேரில் கண்டவர்! யார் இ்ந்த வன்னியரசு?
விசிக-வின் வரலாற்றிலே முதன்முறையாக அமைச்சராகும் வாய்ப்பை பெற்றுள்ள வன்னியரசு யார்? அவரது பின்னணி குறித்து கீழே விரிவாக காணலாம்.

தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்திருந்த விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. விசிக சார்பில் எம்எல்ஏ வன்னியரசும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் எம்எல்ஏ ஷாஜஹானும் இன்று அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.
யார் இந்த வன்னியரசு?
விசிக சார்பில் அமைச்சராக பொறுப்பேற்க உள்ள வன்னியரசுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகிறது. இவர் யார்? இவரது பின்னணி குறித்து கீழே விரிவாக காணலாம்.
சாதிய பாகுபாடு:
வன்னியரசு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி தாலுகாவைச் சேர்ந்த அயன்ரெட்டியார்பட்டி என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் ஜெயராஜ். சாதிய பாகுபாடுகளை சிறுவயது முதலே எதிர்கொண்டு வளர்ந்த இவர் அம்பேத்கர் மற்றும் பெரியாரிய கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு அந்த கொள்கைகளை பின்பற்றி வளர்ந்தவர்.
தமிழீழம் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்ட இவர் பின்னாளில் தன்னை விசிக-வில் இணைத்துக் கொண்டார். மேலும், ஈழத்தின் மீது இருந்த ஈடுபாட்டின் காரணமாக தனது பெயரையும் வன்னியரசு என்று மாற்றிக்கொண்டார். இவரது தந்தை ஒரு கம்யூனிசவாதி. இவரது கிராமத்தில் பிற சமுதாயத்தைச்சேர்நத மக்களும் வசித்து வருகின்றனர். இவரது இளமைக் காலத்தில் அங்கு சாதிய பாகுபாடுகள் மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவரது தம்பியின் திருமணத்தின்போது தனது ஊரில் மற்ற கட்சிகளின் கொடிகம்பங்கள் இருக்கும் இடத்தில், விசிக-வின் கொடி கம்பம் நடுவதற்காக அவர் முயற்சித்தபோது பிற சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் விசிக கொடி கம்பம் மட்டும் நடவே கூடாது என்று பிரச்சினை செய்த சம்பவமும் அரங்கேறியது.
விசிக-வை வளர்த்ததில் பெரும்பங்கு:
விசிக-வின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கு வகித்தவர் வன்னியரசு. திருமாவளவனுடன் நீண்டகாலமாக இணைந்து பணியாற்றி திருமாவளவனின் நம்பிக்கைக்குரிய நபராகவும் திகழ்ந்து வருகிறார். கட்சியில் சாதாரண தொண்டராக தனது பணியைத் தொடங்கி இன்று அமைச்சராகும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
தமிழீழ ஆதரவாளர்:
தமிழீழம் வேண்டும் என்ற கொள்கைகள் மீதும் மிகப்பெரிய ஈடுபாடு கொண்டவர். இலங்கைக்கு நேரில் சென்றும் போர் கொடுமைகளை கண்டு பல முறை ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். போர் உச்சத்தில் இருந்த இலங்கையின் வடக்கு மாகாண பகுதிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளையும், அந்த மக்களையும் சந்தித்தவர். 2005 மற்றும் 2006ம் ஆண்டும் இலங்கைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களுடன் இவருக்கு நல்ல நட்பு இருந்தது. இதன் காரணமாகவே இவர் வெளிநாடு செல்லவும் சில ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு இருந்தது. தமிழீழம் மலர வேண்டும் என்ற நோக்கத்தை தற்போது வரை கொண்ட இவர், சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்கும்போதும் தமிழீழத்திற்காக குரல் எழுப்பினார்.
சொந்த ஊர் மக்கள் மகிழ்ச்சி:
தமிழ்நாட்டிலும் பட்டியலின மக்களுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வந்த வன்னியரசு கடந்த தேர்தலில் வானூர் தொகுதியில் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்டார். ஆனால், இந்த தேர்தலில் திண்டிவனம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் அர்ஜுனனைக் காட்டிலும் சுமார் 734 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். வன்னியரசு திண்டிவனம் தொகுதியில் 63 ஆயிரத்து 833 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
வன்னியரசு அமைச்சராக பதவியேற்க உள்ளதை அவரது சொந்த கிராம மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இவர் தனது மனைவி உள்பட குடும்பத்தினருடன் சென்னையில் தற்போது குடியேறியிருந்தாலும், இவரது சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் இன்னும் அவரது சொந்த ஊரிலே வசித்து வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















