ஸ்டாலினுக்கு ஸ்கெட்ச் போட உதவிய திமுக பழக்கம்.. தேர்தல் வெற்றி பற்றி வி.எஸ்.பாபு விளக்கம்!
நான் திமுக, அதிமுக, தவெகவில் பயணித்திருந்தாலும், விஜய் மீதான ஈர்ப்பு என்பது வேறாக உள்ளது. இது ரசிக மனப்பான்மை என்றில்லாமல் அரசியலும் கலந்திருக்கிறது என சொல்லலாம் என வி.எஸ்.பாபு தெரிவித்துள்ளார்.

தவெகவில் இணைந்து முன்னேற்றம் கண்டதற்கு ஆதவ் அர்ஜூனா தான் காரணம் என கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு தெரிவித்துள்ளார்.
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தோற்கடித்து அதிர்ச்சி கொடுத்தார். அவரது வெற்றி தமிழ்நாடு அளவில் பேசுபொருளானது. அதேசமயம் வி.எஸ்.பாபுவுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடக்கவில்லை. எனினும் தான் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட போது கடுமையான நெருக்கடிகளை சந்தித்ததாக வி.எஸ்.பாபு தெரிவித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில் பேசிய வி.எஸ்.பாபு, ”இந்த வெற்றி எங்கள் முதலமைச்சரின் வெற்றியாகவே பார்க்கிறேன். கொளத்தூர் தொகுதியை நான்தான் கேட்டு வாங்கினேன். தவெகவில் சேர்ந்தவுடனும், விஜயைப் பார்த்தவுடனும் எனக்கு மன நிறைவாக இருந்தேன். கிட்டதட்ட 15 ஆண்டுகள் கழித்து தேர்தலில் போட்டியிட்டேன். காங்கிரஸூடனான பேச்சுவார்த்தையின்போது மு.க.ஸ்டாலின் ஒரு கையால் முடிந்தது என்ற சைகை செய்தார். நான் தவெகவில் வேட்பாளர் தேர்வு முடிந்த நாளில் அதற்கு பதிலாக 2 கைகளால் முடிந்தது என காட்டினேன். அது மிகப்பெரிய அளவில் வைரலானது. இதுபற்றி எல்லாரும் கேட்டார்கள். உண்மையில் எல்லா புகழும் முதலமைச்சர் விஜயை தான் சேரும் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “நான் வெற்றி பெற்ற கொளத்தூர் தொகுதியில் போட்டி கடுமையாக இருந்தது. பல பிரச்னைகளை சந்தித்தேன். விஜயின் முகம் தான் என்னை மக்களிடம் பிரதிபலித்தது. 1996,2001ல் நான் கவுன்சிலராக இருந்தேன். மண்டல சேர்மனாக இருந்தேன். பின்னர் தான் எம்.எல்.ஏ.,வாக மாறினேன். அப்போதெல்லாம் நான் பார்க்காத எழுச்சியை விஜய் வந்த பிறகு பார்க்கிறேன். இளைஞர்கள் மட்டுமல்ல என் வயது பெரியவர்களும் விசிலுக்கு தான் என் ஓட்டு என சொன்னார்கள்.
நான் திமுக, அதிமுக, தவெகவில் பயணித்திருந்தாலும், விஜய் மீதான ஈர்ப்பு என்பது வேறாக உள்ளது. இது ரசிக மனப்பான்மை என்றில்லாமல் அரசியலும் கலந்திருக்கிறது என சொல்லலாம். 30 ஆண்டுகாலமாக தன்னுடைய ரசிகர்களை பக்குவப்படுத்தி கொண்டு வந்துள்ளார். இன்னும் 5 மாதங்களில் கட்சி கட்டமைப்பை பலப்படுத்தி விடுவார். ஆளும் கட்சியின் முதலமைச்சரை நான் தோற்கடித்தது சந்தோசமாக இருந்தது” என வி.எஸ்.பாபு தெரிவித்தார்.
மேலும், “2011ம் ஆண்டு முதல் நான் போராட்டத்தை அனுபவித்து வருகிறேன். திமுகவில் மிகப்பெரிய இன்னல்களை சந்தித்தேன். நான் தவெகவில் இணைந்து முன்னேற்றம் கண்டதற்கு ஆதவ் அர்ஜூனா தான் காரணம். தேர்தலில் ஜெயித்த பிறகு விஜய் என்னைப் பார்த்தபோது வைரலான அந்த செய்கையை மீண்டும் செய்ய சொன்னார். மேலும் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக நின்றாலும் எதுவந்தாலும் சந்திக்கலாம் என்ற மனநிலையில் இருந்தேன். அவருடன் ஏற்கனவே பழகியதால் திமுக என்ன செய்யும் என்பதை அறிந்திருந்தேன். பிரச்சாரத்தில் என்னிடம் நேரடியாக மோதவில்லை. ஆனால் ஏகப்பட்ட நெருக்கடிகள் இருந்தது. குடும்பத்தினர் வழியாகவே மிரட்டினார்கள். தவெகவில் இருப்பவர்கள் உண்மையாக உழைத்தார்கள். அதை என்றும் மறக்க மாட்டேன்” என வி.எஸ்.பாபு கூறியுள்ளார்.
Before You Go
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
ட்ரெண்டிங் செய்திகள்






















