Elephant Died: தாயைப் பிரிந்த குட்டி யானை உயிரிழந்தது: சோகத்தில் மூழ்கிய தெப்பக்காடு: நடந்தது என்ன?
Baby Elephant Died: தாயை விட்டுப் பிரிந்த குட்டி யானை, தெப்பக்காடு வனப்பகுதியில் வளர்க்கப்பட்டு வந்த நிலையில் , உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே 30 ம் தேதி மருதமலை மலையடிவாரத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை உடல் நலக்குறைவால் வனப்பகுதியில் விழுந்து கிடந்தது. சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் பெண் யானையுடன், நான்கு மாதங்கள் ஆன ஆண் குட்டி யானை இருந்ததையும் பார்த்தனர். அப்போது எழ முடியாமல் இருந்த தாய் யானையின் அருகே அதனுடைய குட்டி யானையும் சுற்றி திரிந்தது கண் கலங்க வைத்தது. அதை தொடர்ந்து பெண் யானைக்கு சிகிச்சை அளித்த வனத்துறையினர் கிரேன் மூலம் ராட்சத பெல்ட் உதவியுடன் பெண் யானையை தூக்கி நிறுத்தி, அதன் உடல் நிலை தேறிய பின் வனப்பகுதிக்குள் விடுவித்தனர். இந்த பெண் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோது அதனுடைய குட்டி யானை மற்றொரு யானை கூட்டத்துடன் சென்றது.
தாயை பிரிந்த குட்டி யானை:
பின்னர் மீண்டும் தாய் யானை இருந்த இடத்தை தேடி குட்டியானை வந்தது. இதைக் கண்ட வனத்துறையினர் தாய் யானையுடன் எப்படியாவது குட்டி யானையை சேர்த்து விடலாம் என முயற்சியை தொடங்கினர். ஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை, தாய் யானை குட்டியானையை சேர்க்க மறுத்தது. இதனால் குட்டி யானை வனத்துறையினரை விட்டு பிரியாமல் அவர்களையே சுற்றி வந்தது இதனால் தாய் யானையுடன் சேர்த்து வைக்கும் முயற்சியை கைவிட்ட வனத்துறையினர், குட்டியானையை எப்படி பாதுகாப்பாக பராமரிக்கலாம் என முடிவு செய்து ஒரு வழியாக ஜூன் 9 ம் தேதி நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல திட்டமிட்டனர். பின்பு குட்டி யானை தனி வாகனம் மூலம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு கொண்டு வரப்பட்டது.
நட்பு:
பின்பு கொண்டு வந்த முதல் நாளிலேயே குட்டி யானை 120 கிலோ எடை இருந்தது. ஆனால் தாயை பிரியும்போது குட்டியானையின் எடை 80 கிலோவாக இருந்தது என வனத்துறையினர் தெரிவித்திருந்தனர். லைக் டோஜன் புரத சத்து உணவு, இளநீர் போன்ற நீராதாரங்கள் வழங்கப்பட்டு குட்டியானை பராமரிக்க இரண்டு பாகன்கள் பணியமர்த்தப்பட்டனர். ஜூன் 9 ம் தேதிக்கு பிறகு அடுத்தடுத்த நாட்களில் குட்டி யானையை குழந்தை போல் வனத்துறையினர் பாதுகாத்து பராமரித்து வந்தனர். ஏற்கனவே. இந்த யானைகள் முகாமில் தாயைப் பிறந்த இரண்டு குட்டி யானைகள் பராமரிக்கப்பட்டு வந்தது. அந்த குட்டி யானைகளுடன் இந்த குட்டி யானையும் நடைபயிற்சி மேற்கொண்டு நட்பாக சுற்றி திரிந்தது. இந்த மூன்று குட்டி யானைகளும் தெப்பக்காடு யானைகள் முகாமில் ஒன்றாக சுற்றித் திரிந்தன.
சோகத்தில் மூழ்கிய தெப்பக்காடு:
ஆனால் நேற்று இரவு திடீரென குட்டியானைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது இதனால் அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் யானை குட்டிக்கு என்னவானது என பரிசோதனை மேற்கொண்டனர் நேரம் செல்ல செல்ல குழந்தை போல் இருக்கும் குட்டி யானை உடல் நிலைமை கவலைக்கிடமானது. எப்படியாவது குட்டியை காப்பாற்றி விட வேண்டும் என வனத்துறையினர் தீவிரமாக முயற்சி செய்தும் இரவு 8: 45 மணிக்கு அந்த குட்டி யானை பரிதாபமாக உயிரிழந்தது.

இதனால் தெப்பக்காடு யானைகள் முகாம் சோகத்தில் மூழ்கியது. குட்டி யானையை பிரேத பரிசோதனை செய்ததில் குடலில் அதிக இடங்களில் புண் இருந்ததாக முதற்கட்ட ஆய்வில் தெரிந்ததாகவும், இதன் காரணமாக குட்டி யானையின் உடல் பலவீனமாகி இறந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் குட்டி யானையின் உள் உறுப்பு பாகங்கள் ஆய்வக பரிசோதனைக்கு சேகரிக்கப்பட்டுள்ளது பின்பு யானைக்குட்டியின் உடல் எரியூட்டப்பட்டது .
ஒருபுறம் தாயை இழந்த சோகத்தை விடுத்து தன் இனத்துடன் தெப்பக்காடு யானைகள் முகாமில் சுதந்திரமாக சுற்றித் திரிந்தது. இனி நமக்கான இடம் இதுதான் என நினைத்து உலா வந்தது. ஆனால் 19 நாட்களாக வனத்துறையினரின் பாதுகாப்பில் பராமரிக்கப்பட்டு வந்த குட்டியானை, திடீரென உடல் நலக்குறைவால், தனது மூச்சை நிறுத்திக் கொண்டது. இந்த சோக நிகழ்வானது, குட்டி யானையை வளர்த்து வந்த பாகன்களை சோகத்தில் ஆழ்த்தியது. மேலும், குட்டி யானையின் மரணமானது, பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Before You Go
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
ட்ரெண்டிங் செய்திகள்






















