![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Senthil Balaji Case: செந்தில் பாலாஜிக்கு அடுத்த சிக்கல்.. பிணை மனுவை எந்த நீதிமன்றம் விசாரிக்கும்? நீதிபதி எம்.சுந்தர் சொன்னது என்ன?
செந்தில் பாலாஜியின் பிணை மனு எந்த நீதிமன்றம் விசாரிக்கும் என்பது தொடர்பாக தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என நீதிபதி எம்.சுந்தர் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.
![Senthil Balaji Case: செந்தில் பாலாஜிக்கு அடுத்த சிக்கல்.. பிணை மனுவை எந்த நீதிமன்றம் விசாரிக்கும்? நீதிபதி எம்.சுந்தர் சொன்னது என்ன? The bench headed by Justice M. Sundar said that the Chief Justice will decide which court will hear Senthil Balaji's bail plea. Senthil Balaji Case: செந்தில் பாலாஜிக்கு அடுத்த சிக்கல்.. பிணை மனுவை எந்த நீதிமன்றம் விசாரிக்கும்? நீதிபதி எம்.சுந்தர் சொன்னது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/31/7fa85887c8ab8343407fa4a59b1eb61b1693465002349589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
செந்தில் பாலாஜியின் ஜாமீன் கோரிய மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்ற விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதியிடம் முறையிடுமாறு நீதிபதி எம்.சுந்தர் தலைமையிலான அமர்வு தெரிவித்துள்ளது.
சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்பு சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்தார். ஆனால் இந்த மனுவை விசாரிக்க தமக்கு அதிகார வரம்பு இல்லை என தெரிவித்து சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் மனுவை திருப்பி அனுப்பியது. ஆனால் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் எம்.பி.,எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை சிறப்பு நீதிமன்றமும் மறுத்து விட்டது.
மேலும், ஜாமீன் மனுவை தாம் விசாரிக்க அதிகாரம் இருக்கிறதா? என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று வருமாறும் சிறப்பு நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யபட்டுள்ளது. அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வில் முறையிட்டார்.
அப்போது, இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி ஆர் சக்திவேல் ஏற்கனவே விலகிய நிலையில் இந்த முறையீட்டு எப்படி ஏற்பது ? என நீதிபதி எம்.சுந்தர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, மாற்று அமர்வும் இன்று இல்லை என்பதால்தான் தங்களிடம் முறையிடுவதாகவும் நிர்வாக ரீதியான உத்தரவை பிறப்பித்தால் கூட போதுமானது என தெரிவித்தார். எந்த வழக்கை யார் விசாரிப்பது என்பது குறித்து தலைமை நீதிபதி தான் முடிவு செய்வார் என கூறிய நீதிபதி எம்.சுந்தர் இந்த வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதியிடம் முறையிடுங்கள் என நீதிபதி எம்.சுந்தர் கூறினார். அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பான ஆட்கொணர்வு மனு தொடர்பான விசாரணையில் இருந்து நீதிபதி ஆர் சக்திவேல் விலகியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி ஆர்.சுரேஷ் குமார் தலைமையிலான அமர்வில் நாளை முறையிடப்படும் என செந்தில் பாலாஜி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)