விழுப்புரம் அரசுப் பள்ளியில் அதிர்ச்சி! போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியர்: பெற்றோர்கள் கொந்தளிப்பு
விழுப்புரத்தில் அரசு பள்ளி மாணவிகளிடம் தவறான தொடுதலில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியரை போக்சோ வழக்கில் கைது.

விழுப்புரம்: விழுப்புரத்தில் அரசு பள்ளி மாணவிகளிடம் தவறான தொடுதலில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியரை போக்சோ வழக்கில் கைது செய்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகத்தினர் காவல் துறையினர் தகவல் தெரிவிக்கவில்லை என கூறி அரசுபள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் பள்ளி ஆசிரியர் மீது தவறில்லை என கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் நகர பகுதியான கீழ்பெரும்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளியில் பானாம்பட்டு பாதை பகுதியை சேர்ந்த சிவபாலன் என்பவர் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். உடற்கல்வி ஆசிரியர் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவிகளை பள்ளியின் விளையாட்டு மைதானத்திற்கு அழைத்து சென்று தவறான தொடுதலில் ஈடுபட்டதாக 5 க்கும் மேற்பட்ட மாணவிகள் பொறுப்பு தலைமை ஆசிரியர் வடிவாம்பாள் இடம் தெரிவித்துள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ச்ச்சியடைந்த பொறுப்பு தலைமை ஆசிரியர் வடிவாம்பாள் குழந்தைகள் பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு உடற்கல்வி ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நான்கு நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.
இச்சம்பவம் மாணவிகளின் பெற்றோர்களுக்கு தெரியவரவே பள்ளி ஆசிரியர்கள் மற்றும் வழக்கு பதிவு செய்த போலீசார் நான்கு நாட்கள் ஆகியும் ஏன் எங்களுக்கு தெரியப்படுத்தவில்லை என ஐந்திற்கும் மேற்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி வளாகத்தில் ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து மாவட்ட கல்வி அலுவலர் பள்ளிக்கு வருகை தந்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களுடன் விசாரணை மேற்கொண்டார். விசாரணையின் போது தலைமை ஆசிரியர் மற்றும் காவல்துறையினர் வழக்கு தொடர்பான எவ்வித தகவல்களும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை எனவும் தங்களுக்கு தெரியாமல் தங்களது பிள்ளைகள் வாக்குமூலம் பெற்று காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டாம் என வலியுறுத்தினர். மேலும் உடற்கல்வி ஆசிரியர் மீது எந்த தவறும் இல்லை என கூறி மாணவர்கள் பள்ளி வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.




















