மீண்டும்.. மீண்டுமா? தமிழ்நாட்டை அச்சுறுத்தும் கொரோனா.. அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்- கவலையில் மக்கள்
தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் தமிழ்நாடு அரசு முகக்கவச கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளது.

ஒட்டுமொத்த உலகம் முழுவதும் பீதியை ஏற்படுத்திய ஒரு சொல் கொரோனா. சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய இந்த வைரஸ் கோடிக்கணக்கான உயிர்களை பறித்தது மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலக வாழ்க்கையையும் ஸ்தம்பிக்க வைத்தது.
உலகை உலுக்கிய கொரோனா:
கடந்த 2020, 2021 மற்றும் 2022ம் ஆண்டை முழுவதும் புரட்டிப்போட்டது இந்த கொரோனா. குறிப்பாக, 2020 மற்றும் 2021ம் ஆண்டு முழுவதும் மக்கள் தங்கள் வாழ்க்கை முழுவதையும் ஊரடங்கு காலத்திலே கழிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும், வேலைகளையும் இழந்து அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கூட கையில் பணம் இல்லாமல் நாடு முழுவதும் மக்கள் அவதிக்கு ஆளாகினர்.
மீண்டும் அச்சுறுத்தல்:
இந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு உலகளவில் அதிகரிக்கத் தொடங்கி வருகிறது. இது மக்களுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், கடந்த கால கொரோனா பாதிப்பு ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்தும், அதன் இழப்புகளில் இருந்தும் இன்னும் வெளியில் வராத மக்கள் கோடிக்கணக்கான பேர் உள்ளனர்.
உலகளவில் அதிகரித்து வரும் இந்த கொரோனாவை தமிழ்நாட்டையும் விட்டுவைக்கவில்லை. தமிழ்நாட்டில் நீண்ட இடைவேளைக்கு பிறகு கொரோனா பாதிப்பு ஒரே வாரத்தில் 60-ஐ கடந்தது. மேலும், சென்னையில் கொரோனா பாதிப்பால் ஒருவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு உயிரிழந்துள்ளார். இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
முகக்கவசம் கட்டாயம்:
கடந்த கால அனுபவங்களை மனதில் கொண்டு தமிழக அரசு உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதன் காரணமாகவே தமிழ்நாட்டில் பொது இடங்களில் மக்கள் கூடும்போது முகக்கவசம் அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமீபகாலமாக தமிழகத்தில் பலருக்கும் சளி, இருமல் போன்ற தொல்லை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழ்நாட்டில் கோடைக் காலம் என்றாலும் தொடர்ந்து மழை பெய்து வருவதும், இனி வரும் நாட்கள் தமிழ்நாட்டில் மழையின் தாக்கம் அதிகளவில் காணப்படும் என்பதாலும் குழந்தைகள், முதியவர்கள் ஆகியோருக்கு அதிகளவு உடல்நலக்குறைவு ஏற்படுவது இயல்பான ஒன்றாகும். இது கொரோனாவிற்கு சாதகமான சூழலை ஏற்படுத்திடக் கூடாது என்று சுகாதாரத்துறையினர் மிகுந்த கவனமாக உள்ளனர். இதன் காரணமாகவே, முகக்கவச அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அச்சத்தில் மக்கள்:
அதேசமயம், கொரோனாவில் இருந்து தற்போதுதான் ஓரளவு மீண்டுள்ள தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் கொரோனா அதிகரிப்பு, முகக்கவசம் கட்டாயம் போன்ற அறிவிப்பால் சற்று பீதி அடைந்துள்ளனர். மக்களின் முழு அச்சமும் மீண்டும் ஊரடங்கு நிலையை எதிர்கொண்டால் என்ன செய்வது? என்பதே ஆகும். ஊரடங்கு போன்ற மோசமான நிலையை எதிர்கொண்டு விடக்கூடாது என்பதற்காகவே முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற அடிப்படை கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தி வருகிறது.





















