![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
CM Stalin: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாக குழு; எதற்காக இந்த குழு? முழு விவரம்
தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாக குழு அமைக்கப்பட்டுள்ளது
![CM Stalin: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாக குழு; எதற்காக இந்த குழு? முழு விவரம் Tamilnadu Climate Change Executive Committee headed by Chief Minister M K Stalin know about group details CM Stalin: முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாக குழு; எதற்காக இந்த குழு? முழு விவரம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/22/0497c28b9c1d0a018b5b7ae0c20c76c41666435006610571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாக குழு அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இக்குழு, காலநிலை மாற்றம் தொடர்பான செயல்திட்டத்தினை உருவாக்கி, அதனை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை தயாரிக்கும் பணிகளை இக்குழு மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவின் உறுப்பினர்களாக, தமிழ்நாடு அரசின் மூத்த அரசு செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்ற நிறுவனம்:
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் பொருட்டு, பல்வேறு திருப்புமுனை முயற்சிகளை மேற்கொள்வதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இம்முயற்சி பாதையில், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழக இயக்கம் மற்றும் தமிழ்நாடு சதுப்புநில இயக்கம் ஆகிய மூன்று முக்கிய இயக்கங்களை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது. காலநிலை செயல்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல, தமிழ்நாடு பசுமை காலநிலை மாற்ற நிறுவனம் என்னும் சிறப்பு செயல்பாடு நிறுவனத்தை தமிழகம் அமைத்துள்ளது.
தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்திற்கு கொள்கை வழிகாட்டுதலை வழங்கவும், காலநிலை மாற்றத்திற்கான தகவமைப்பு காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தணிப்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கவும், தமிழ்நாடு மாநில காலநிலை மாற்ற செயல்திட்டத்தினை உருவாக்கி அதனை செயல்படுத்துவதற்கான உரிய வழிகாட்டுதல்களை வழங்கும் பொருட்டு தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவினை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
முதலமைச்சர் தலைமையில் குழு:
தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் ஒப்புதலுடன், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை இதற்கான அரசாணையினை வெளியிட்டுள்ளது. இக்குழுவில் பல்வேறு முக்கிய துறைகளின் அனுபவமிக்க மூத்த அரசு செயலாளர்கள் தவிர, காலநிலை மாற்றம் தொடர்பான பல்வேறு பிரிவுகளின் வல்லுநர்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.இந்த நிர்வாகக் குழுவானது தமிழ்நாடு அரசின் முதலைமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் செயல்படும்.
பொருளாதார நிபுணரான திருமாண்டேக் சிங் அலுவாலியா, இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு. நந்தன் எம்.நிலக்கேனி, ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் துணை பொதுச் செயலாளர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டத்தின் 6வது செயல் இயக்குநர் எரிக்.எஸ்.சோல்ஹிம், நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் திரு. ரமேஷ் ராமச்சந்திரன், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு.ஆர். சுந்தர்ராஜன், ராம்கோ சமூக சேவைகளின் தலைவர் திருமதி.நிர்மலா ராஜா ஆகியோர் இந்நிர்வாக குழுவின் சிறப்பு உறுப்பினர்களாவர்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர், தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவர், அரசு துறைகளான தொழில். நகராட்சி வளர்ச்சி நிர்வாகம் மற்றும் மற்றும் ஊராட்சி. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, குடிநீர் வழங்கல், நிதி, எரிசக்தி, ஊரக தமிழக அரசின் தலைமைச் செயலாளர், தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவர், அரசு துறைகளான தொழில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், நிதி, எரிசக்தி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, கால்நடை பராமரிப்பு, பால் வளம், மீன் வளம் மற்றும் மீனவர் நலம், வேளாண்மை மற்றும் உழவர் நலம் ஆகியவற்றின் மூத்த அரசு செயலாளர்கள் இந்நிர்வாகக் குழுவின் உறுப்பினர்களாக செயல்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)